ஓபிஎஸ்க்காக ஆற்றையே ஓடையாக மாற்றிய அதிகாரிகள்: லெட்சுமிபுரத்தில் போராட்டம்!
கிணறு விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக, பொதுப்பணித்துறையினர் ஒரு ஆற்றையே ஓடையாக மாற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தேனி: கிணறு விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக, பொதுப்பணித்துறையினர் ஒரு ஆற்றையே ஓடையாக மாற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிணற்றை ஒப்படைக்கக்கோரியும் லெட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் கிராமம். இங்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் 200 அடி ஆழத்தில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.
இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மக்கள், கிணற்றை கிராமத்திற்கு வழங்கக்கோரி சாலைமறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு என தொடர் போராட்டம் நடத்தினர்.
மக்களுக்கு தருவதாக கூறிவிட்டு..
இதைத்தொடர்ந்து லெட்சுமிபுரம் கிராம மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரச்சனைக்குரிய நிலத்தை கிராம மக்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
வேறு ஒருவருக்கு விற்பனை
இதனால் நிலத்தை வாங்க கிராம மக்கள் பணம் வசூல் செய்யத் தொடங்கினர். ஆனால், பேச்சுவார்த்தை நடப்பதற்கு முதல்நாளே சுப்புராஜ் என்பவருக்கு, அந்த நிலத்தை ஓபிஎஸ் விற்றது தெரியவந்தது.
கிராம மக்கள் போராட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இன்று முதல் முதல் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிணற்றை கிராம மக்களுக்கே தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறு ஓடையாக மாற்றம்
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பொதுப்பணித்துறையினர் அங்குள்ள வறட்டாறை ஓடை என மாற்றி பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் குற்றச்சாட்டு
வறட்டாறு மூலம் 13 கண்மாய்கள் நிரம்புகின்றன. சுமார் 74 ஏக்கர் நிலத்தில் இருபோக விவசாயம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வறட்டாறை, பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு ‘வறட்டு ஓடை' என பெயர்மாற்றம் செய்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.