யாருப்பா இந்த சகாயம்.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு..!
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குறித்த பேச்சுக்கள் மீண்டும் தமிழகத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கே அவரைப் பற்றிய ஆர்வம் வந்துள்ளது.
சகாயம் குறித்து விக்கிபீடியாவில் தேடிப் பார்த்து படித்து வியந்துள்ளார். அத்தோடு நில்லாமல் தனது முகநூலிலும் வெல்டன் சகாயம் என்று மனதாரப் பாராட்டியுள்ளார். அவரது விக்கிபீடியா பக்கத்தையும் ஷேர் செய்துள்ளார்.
தமிழக மக்கள் சமீப காலமாக நல்ல அரசியல்வாதிகள் கிடைக்க மாட்டார்களா, நல்ல தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்க ஆரம்பித்துள்ளனர். ஊழல் பெருச்சாளிகளைப் பார்த்துப் பார்த்து மக்கள் வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில்தான் மக்களின் மனதில் ஏகோபித்த அன்பையும் ஆதரவையும் பெற்றவராக சகாயம் உருவெடுத்துள்ளார். இவர்தான் தமிழகத்திற்குத் தலைமை தாங்க சரியான நபர் என்று பலரும் கூறி வருகின்றனர். அப்துல் கலாம் போல துணிச்சலாக, புத்திசாலித்தனமாக, மக்களுக்காக செயல்படக் கூடிய தலைவராக சகாயம் திகழ்வார் என்பது மக்களின் கருத்தாகும்.
இப்படி சகாயம் குறித்து பேச்சுக்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் குறித்து கட்ஜுவுக்கே அதிக ஆர்வம் பிறந்து விட்டது போலும். உடனே விக்கிபீடியாவைப் பார்த்து அவர் குறித்த விவரத்தைப் படித்து அறிந்துள்ளார். வியந்துள்ளார். பேஸ்புக்கிலும் வெல்டன் சகாயம் என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தைப் பீடித்துள்ள அரசியல் சனியன்களிடமிருந்து மக்களை மீட்டுக் காக்க சகாயம்தான் சரியான நபர் என்று மக்கள் மனதில் எண்ணம் மேலோங்கி வரும் நிலையில், அதை ஆமோதிப்பது போல கட்ஜு போட்டுள்ள பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.