கேரளாவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.10 கோடி நிதியுதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா அரசுக்கு இந்தியாவின் பல மாநில அரசுகள், பொதுமக்கள் உதவி வரும் நிலையில், மேற்கு வங்கம் அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்துவருவதால் கேரளா வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கிறது. இதனால், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அரசின் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமல்லாமல் முப்படையினரும் களம் இறங்கி மக்களை காப்பாற்றி வருகின்றனர்.
வெள்ளத்தால் கேரளாவில் ரூ.19,500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைக் கருதி அம்மாநிலத்துக்கு உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.100 கோடி நிவாரண நிதியை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி ரூ.500 கோடி நிவாரண உதவியாக அறிவித்தார். மேலும், கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு முதலில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது. பின்னர் கூடுதலாக மீண்டும் ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்து ரூ.10 கோடி வழங்கியது.
தெலங்கானா மாநில அரசு ரூ.25 கோடி வழங்குவதாக அறிவித்தது. டெல்லி அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகள் தலா ரூ.10 கோடி வழங்குவதாக அறிவித்தன.
ஜார்கண்ட், பீகார், ஒடிசா மாநில அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு மேற்குவங்கம் அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கேரள சகோதர, சகோதரிகள் இயல்புவாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.