தேசிய தலைவர்கள் கவனம் தூத்துக்குடி பக்கம் திரும்புகிறது.. மமதா பானர்ஜி நாளை வருகை?
Recommended Video
தூத்துக்குடி: போலீசாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட தூத்துக்குடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நாளை வருகை தர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி கொடூர துப்பாக்கிச் சூடுகள் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழகத்தில் நடந்திருக்கும் இந்த படு பாதக பச்சைப் படுகொலைகள் மனித நேய விரும்பிகளை அதிரத வைத்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தூத்துக்குடி வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன முன்னதாக இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் இப்போதுதான் பெங்களூரு வந்தடைந்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பான சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மமதா வேதனை
தமிழக மக்களின் துக்கமான நேரத்தில் என்னுடைய பிரார்த்தனைகள் அவர்கள் பக்கம் இருக்கும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று நேற்று கூறியிரு்தார்.
பெங்களூரில் மமதா
இந்த நிலையில் பெங்களூரில் இன்று குமாரசாமி பதவியேற்பு விழா முடிந்த பிறகு, பெங்களூரில் இருந்து மமதா பானர்ஜி தூத்துக்குடி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கமல் - ஸ்டாலின் - திருமா
ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தூத்துக்குடி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
ராகுலும் வரலாம்
மமதா வருகை தந்தால் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய அளவில் தூத்துக்குடி பயங்கரம் கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. தேசிய அளவில் தற்போது தூத்துக்குடி விவகாரமும் பெரிதாக பேசப்பட ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.