தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களில் 1500 மிமீ மழை பெய்யலாம் - வெதர்மேன்
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களுக்கு 1500 மிமீ மழை பெய்யலாம் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தம்முடைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழையின் காலம் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது.
இதனால் இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், அடுத்த 10 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடுமையாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு, திண்டுக்கல் பகுதிகளில் மிதமான மழை இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழையின் காரணமாக 1500 மிமீ மழை கூட பெய்யும் வாய்ப்பு உள்ளதால், சுற்றுலா செல்பவர்கள் தங்களது பயணதிட்டத்தை தள்ளிப் போடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.