'த.மா.கா' மாதிரி மாறி விடாமல் உஷாரா இருந்து பொழச்சுக்குமா 'ஆஆ'...?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் இடையிலான வித்தியாசம் இருந்தாலும்.. இரண்டையும் நிறையவே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
பல விஷயங்களில் இந்த இரண்டு கட்சிகளும் ஒத்துள்ளன. ஆனால் தமாகாவுக்கு ஏற்பட்ட நிலை ஆம் ஆத்மி சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுகிறது.
ஒரு புதுக் கட்சி தொடங்கினால் அதன் எழுச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மூப்பனார் தொடங்கிய த.மா.கா.தான் நல்ல உதாரணம். அதேசமயம், ஒரு கட்சியை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கும் இதே த.மா.காதான் உதாரணம். காரணம், அதன் எழுச்சியைப் போலவே அதன் வீழ்ச்சியும் பயங்கரமாக இருந்தது.
மறக்க முடியாத 1996
1996ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆண்டு என்பது நிறையப் பேருக்கு மறந்து போயிருக்கலாம். பல பரபரப்பு சம்பவங்களைக் கண்ட ஆண்டு அது.
சிரிக்காத நரசிம்ம ராவ்
சிரிப்புன்னா என்னவென்றே இவருக்குத் தெரியாதா என்று பலரும் கிண்டலடிக்கும் வகையிலான மெளனம் பூத்த முகத்துடன் வளைய வந்த நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தார் அப்போது.
விஸ்வரூபம் எடுத்துத் தாண்டவமாடிய ஊழல்கள்
மேலும் நாட்டை அப்போது பல பிரமாண்ட ஊழல்கள் விஸ்வரூபம் எடுத்துத் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. பிரதமர் அலுவலகமே சர்ச்சையில் சிக்கிக் கிடந்தது.
நம்பகத்தன்மையை இழந்த ராவ்
கட்சிகள், மக்கள் ஆகியோரின் நம்பகத்தன்மையை இழந்து அவல நிலையில் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அப்போது இருந்தது.
ஹர்ஷத் மேத்தா ஊழல் - வங்கி ஊழல்கள்
பங்குச் சந்தை புரோக்கர் ஹர்ஷத் மேத்தாவின் இமாலய ஊழல், வங்கிகளின் போலி ரசீது ஊழல் என நாடே பரபரப்பாகிக் கிடந்தது அந்த ஆண்டில்தான்.
ஜே.எம்.எம்.முக்குப் பணம் கொடுத்த பரபரப்பு
மேலும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தோற்கடிக்க ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சாவுக்கு பெரும் பணத்தை ராவ் அரசு கொட்டிக் கொடுத்து அம்பலமான ஆண்டும் அதுதான்.
தமிழகத்தில் வெடித்த திடீர் புரட்சி
இந்த ஆண்டில்தான் தமிழகத்திலும் ஒரு பெரும் புரட்சி வெடித்தது. அதுவரை தமிழகத்தில் கூட்டணியை மாற்ற தீர்மானித்தது காங்கிரஸ். திமுகவை அது நாட விரும்பவில்லை. ஜெயின் கமிஷன் அறிக்கையில் திமுக மீது கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அதற்குக் காரணம்.
ஜெயலலிதாவுடன் சேர முடிவு
திமுக இல்லாவிட்டால் அதிமுகதானே... இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர முடிவு செய்தார் ராவ். இதை தமிழக காங்கிரஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது அதிமுக அரசு மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள்...
கொதித்துக் கிளம்பிய மூப்பனார்
ராவின் முடிவால் கடுப்பாகிப் போன மூப்பனார் அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார். அதுதான் தனிக் கட்சி. அவருக்கு அப்போது பல பெரிய பெரிய தலைவர்கள் பக்கபலமாக இருந்தனர். இதனால் உதயமானது தமிழ் மாநில காங்கிரஸ். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காங்கிரஸும் அவர் பின்னால் வந்தது. இப்படி அத்தனை பேரும் மூப்பனார் பக்கம் திரண்டு வர முக்கிய மூல காரணம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஆதரவுதான்.
சத்தியமூர்த்தி பவனில் வெடித்த கலவரம்
ராவ் முடிவை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் கிட்டத்தட்ட கலவரமே வெடித்தது. நரசிம்மராவின் பேனர்கள், போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி அனந்தன் அங்கிருந்து ஓட்டம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
காமராஜரை முன்வைத்து
மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம், தூய்மையான அரசியல், கொள்கையுடன் நடை போடுவோம் என்று அறிவித்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார் மூப்பனார்.
மாபெரும் வெற்றி
தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் திமுகவுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலை கண்டது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்தடுத்து 2 மத்திய அரசுகளில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் திகழ்ந்தது. ப.சிதம்பரம் இந்த இரண்டு அரசுகளிலும் நிதியமைச்சராக இருந்தார்.
மூப்பனாரின் பிரதமர் கனவு
இநத் நேரத்தில்தான் மூப்பனாரின் பிரதமர் கனவு அவருக்கு எதிராக திரும்பிப் போனது. அவருக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்ற பேச்சு பெரிய அளவில் அடிபட்டுக் கொண்டிருந்த நேரம். ஆனால் அது கிடைக்காமல் போய் விட்டது. இதனால் அப்செட்டானார் மூப்பனார். தனக்கு பிரதமர் பதவி கிடைக்க விடாமல் தமிழகத்திலிருந்தே சதி செய்து விட்டதாக அவர் வருந்தினார்.
98ல் வீழ்ச்சி
இந்த நிலையில், 1998 லோக்சபா தேர்தலில் தமாகாவுக்கு பெரும் அடி கிடைத்தது. அக்கட்சிக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இருப்பினும் 2001 சட்டசபைத் தேர்தலில் தமாகாவுக்கு 23 இடங்களில் வெற்றி கிடைத்தது.
திடீர் மரணம்
இந்த நிலையில்தான் மூப்பனார் 2001ல் மரணமடைந்தார். அத்துடன் தமாகாவின் செல்வாக்கு தடாலடியாக மங்கிப் போனது. அங்கிருந்து பலரும் காங்கிரஸுக்குத் திரும்பிப் போனார்கள். அவர்களுக்கு முன்பாக, மூப்பனார் உயிருடன் இருந்தபோதே ப.சிதம்பரம் விலகி தனிக் கட்சி கண்டார். அவரும் பின்னர் காங்கிரஸில் ஐக்கியமானார்.
குறுகிய காலத்தில் வீழ்ந்த த.மா.கா.
மிகக் குறுகிய காலத்திலேயே வீழ்ந்த கட்சி த.மா.கா. ஆனால் அது பிறந்த விதம், பிறந்ததும் ஏற்படுத்திய பரபரப்பு நாடறிந்த ஒன்று.
ஆம் ஆத்மி...
இப்போது ஆம் ஆத்மியும் அதே போலத்தான் எழுச்சியுடன் பிறந்துள்ளது. மிகப் பெரிய வெற்றியை தலைநகரத்தில் ஈட்டியுள்ளது. இந்தக் கட்சியின் போக்கும், வளர்ச்சியும் போகப் போகத்தான் தெரியும்..
மூப்பனார்- விஜயகாந்த் - கேஜ்ரிவால்
இந்த மூன்று பேருக்குமே ஒரு வகையான ஒற்றுமை உண்டு. அதாவது மக்கள் இவர்களை மிக மிக முழுமையாக நம்பி வாக்களித்தனர் - வாக்களித்துள்ளனர். ஆனால் மூப்பனார் அகால மரணமடைந்தார். விஜயகாந்த் மக்கள் அளித்த நம்பிக்கையை தூக்கிப் போட்டு விட்டு கூட்டணி அரசியலுக்குள் குடி புகுந்து விட்டார். கேஜ்ரிவாலை இப்போது மக்கள் நம்பியுள்ளனர்.
மக்கள் நம்பிக்கையை மதிக்காவிட்டால்
மக்கள் எப்போதுமே யாரையும் எளிதாக நம்பி விடுபவர்கள். குறிப்பாக தூய்மையான அரசியல், லஞ்ச லாவண்யமற்ற ஆட்சி என்று கூறினால் நிச்சயம் நம்புவார்கள்.. காரணம், அதற்காக பல காலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் அவர்கள், பாவப்பட்டவர்கள்... அப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொடுத்த காரணத்தால்தான் மூப்பனாரையும் நம்பினார்கள், விஜயகாந்த்தையும், நம்பினார்கள், இன்று கேஜ்ரிவாலையும் நம்பி வாக்களித்துள்ளனர்.
ஆனால் மூப்பனாரும் சரி, விஜயகாந்த்தும் சரி ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு ஏமாற்றத்தையேத் தந்தனர். கேஜ்ரிவால் என்ன செய்யப் போகிறார்.. போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.