கோடிக்கணக்கில் சம்பளம், ஆடம்பர ஷூட்டிங்.. கடனில் மூழ்கும் தயாரிப்பாளர்கள்.. சினிமாவின் சாபக்கேடுகள்!
Recommended Video
சென்னை: கோடம்பாக்கமாக இருந்தபோது சினிமா தொழில் கண்ட வளர்ச்சி.. பெற்ற லாபம் இவையெல்லாம்... கோலிவுட் என அழைக்கப்பட்டதிலிருந்து தொய்வைச் சந்தித்து வருகிறது என்பதுதான் எதார்த்தம். இதற்கு முக்கியமாக சொல்லப்படுவது உச்சமாகியிருக்கும் நாயகர்கள், நாயகிகளின் சம்பளம்.
தயாரிப்பாளர் அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி, சினிமாத்துறையின் எதார்த்தத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. சினிமாத்துறையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் வெறும் 10 %பேர்தான், மீதமுள்ளவர்கள் தினசரி வாழ்க்கையுடன் போராடவேண்டியுள்ளது என்றார் பிரகாஷ் ராஜ்.
அதேபோல், தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்திக்க, சில உச்ச நட்சத்திரங்களின் சம்பளமே காரணம் என்று வெளிப்படையாக பேசிய அவர், மாற்றத்தை நம் வீட்டிலிருந்து துவங்குவோம் என்று சொன்னார். அரசு சினிமாத்துறையை சீர்படுத்தவேண்டும் என்று பிரகாஷ்ராஜ் பேட்டியளித்தார்.
தயாரிப்பாளர்களின் சாபக்கேடு
ஹுரோ, ஹுரோயின்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம், ஆடம்பர ஷூட்டிங் என்று காலம் காலமாக பல சாபக்கேடுகளைக் கடந்து தான் தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை வெளியிட்டு வருகின்றன. பல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம், ஆடம்பரமான ஷூட்டிங் என்று ஆற்றில் விட்ட காலை சேற்றில் விட முடியாமல் கடன்படுவது காலம் காலமாக சினிமாத் துறைக்கு சாபக்கேடான விஷயமாக இருந்து வருகிறது.
தயங்கும் தயாரிப்பு நிறுவனங்கள்
தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக, தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் நடிகர்கள் வடிவேலு, சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நடிகர்கள் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் வெற்றி பெருவதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில், பணத்தை வாரி இறைத்து படம் எடுக்க பலரும் தயக்கம்காட்டுகிறார்கள்.
கடனில் சிக்கும் நிறுவனங்கள்
அதனால், நல்ல வலுவான கதையை தேர்வு செய்து, கதையை நம்பி முதலீடு செய்வது சமீப காலமாக தமிழ் திரையுலகில் அதிகரித்துவருகிறது. எனினும் சில தவிர்க்க முடியாத சூழலில் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் எப்படியாவது கடன்பட்டு படத்தை எடுத்து முடித்துவிட வேண்டும் என்று கந்தவட்டிக் கொடுமையில் சிக்கிக் கொள்கின்றனர். பட்டகடனுக்காக தன்னுடைய வீட்டையே விற்றுவிட்டதாக கொந்தளிக்கிறார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.
சம்பளத்தை குறைத்தால் மட்டும் போதுமா?
ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்கிறார்கள் இன்னோரு தரப்பினர். இவர்களுக்காக காத்திருக்காமல், கதைக்கு ஏற்றவர்களை இனம்கண்டு படத்தை முடிப்பதே இப்போதைக்கு புத்திசாலித்தனம் என்கிறார் வளர்ந்துவரும் இளம் இயக்குநர் ஒருவர்.