திமுகவிற்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஒரு பெரிய சபாஷ்!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் பல்வேறு வதந்திகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேபோன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு இருக்கலாம் இன்று முணுமுணுப்புகள் அதிகரித்துள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் இன்று காவிரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்
புகைப்படத்தில் பல தகவல்கள்
மேலும் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் வார்டுக்கு இவர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி அவர்கள் சந்தித்த புகைப்பட காட்சிகள் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி life support எதுவும் இல்லாமல் இயல்பாக சிகிச்சை பெற்று வரும் காட்சி இதன் மூலம் தெளிவாகியுள்ளது. இதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்கள் சம்மதம்
இந்த புகைப்படத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகிய கருணாநிதியின் உறவினர்களும் உடன் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்தேதான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதும், அது கருணாநிதியின் சமூக வலைத்தளங்கள் வழியாக திமுக தொண்டர்களை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது.
|
ஜெயலலிதா நிலை
அதேநேரம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்த புகைப்படமோ வீடியோவோ அப்பொழுது வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியது. இதனால்தான் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த விசாரணை இன்னும் தொடர்ந்து விசாரித்து கொண்டுள்ளது
கருணாநிதி குடும்பத்தாருக்கு சபாஷ்
இது போன்ற எந்தக் குழப்பமும் இன்றி தொண்டர்களுக்கு தைரியம் ஏற்படுத்தும் வகையில், கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது அவரின் குடும்பத்தாருக்கு சபாஷ் சொல்ல வைக்கிறது. மற்றும் திமுகவின் அணுகுமுறையையும் பொதுமக்களால் பாராட்ட வைக்கிறது. காவிரி மருத்துவமனையில் குவிந்துள்ள திமுக தொண்டர்களுக்கு நாளை முதல் உணவு, தண்ணீர் வழங்கவும் கட்சி தலைமை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போது முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட யாரையும் அருகே அனுமதிக்கவில்லை என்று விமர்சனம் உள்ளது. இவ்வளவு ஏன், அப்போது தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவையும் கூட, ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்குள் அனுமதிக்கவில்லை. அனைத்து ஏற்பாடுகளும் சசிகலா மட்டுமே செய்து வந்தார்.
தனி உரிமை கிடையாது
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறுவதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் நேரில் பார்த்து அறிந்து கொள்வதற்கு கருணாநிதி குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர். ஜெயலலிதா அல்லது கருணாநிதி என்பவர் தனிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு சொந்தமானவர்கள் கிடையாது. கோடிக்கணக்கான தொண்டர்களின் உரிமை, உடமை அவர்கள். அரசியல் தலைவர்கள் நாட்டின் சொத்து என்று அழைக்கப்படுவார்கள். அவர்களின் சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறையில் எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. ஆனால், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா விவகாரங்களில் எப்போதுமே இது நேர் எதிராகத்தான் இருந்து வந்துள்ளது.
ரத்த உறவுகள் அருமை
இந்த விஷயத்தில் திமுக மிகவும் சிறப்பான அணுகுமுறையை கையாண்டுள்ளது. மேலும் ஒருவர் நோய்வாய் பட்டிருக்கும் போது ரத்த உறவுகளின் அருகாமை அவர்களுக்கு எந்த அளவுக்கு உதவி செய்யும் என்பதற்கு கருணாநிதி ஒரு உதாரணம். கருணாநிதியை காவிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது திமுக தொண்டர்கள் எழுப்பிய வாழ்க என்ற கோஷம் அவரது நாடி துடிப்பை சீராக்கி விட்டதாகவும் தெரிவித்தார் வைகோ. இது இது போலத்தான் சொந்தங்களின் அருகாமையும் கருணாநிதிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. தள்ளாத வயதிலும் அவர் தனது நோயை எதிர்த்துப் போராடும் சக்தியை கொடுத்துள்ளது. இது ஜெயலலிதா விஷயத்தில் மொத்தமாக மிஸ்சிங் ஆகியிருந்தது.