திமுக தோல்விக்கு காரணங்கள் என்ன? அரசியல் விமர்சகர்கள் அடுக்கும் பாயிண்டுகள்!
சென்னை: இயல்பாகவே ஆட்சிக்கு எதிராக எழும் மக்களின் மன நிலையையும் தாண்டி, அதிமுக இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்ப்பலையை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதில் திமுக தோல்வியை தழுவியுள்ளது.
காலை முதல் மதியம்வரையிலான தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட், மீண்டும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையப்போகிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டது.
திமுக கடந்த 2011 சட்டசபை தேர்தல், 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என வரிசையாக தோல்வியை தழுவிய நிலையில், இப்போது, 2016 சட்டசபை தேர்தலையும் இழந்துள்ளது.
விமர்சகர்கள்
திமுகவின் தோல்விக்கான காரணம் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் இதோ: திமுக கடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வென்று, எதிர்க்கட்சியாக கூட வர முடியாமல் போனது. அந்த அளவுக்கு மக்கள் அக்கட்சி மீது கோபமாக இருந்தனர்.
ஈழம் காரணம்
திமுக மீது மக்களின் கோபம் இந்த அளவுக்கு அதிகரிக்க, ஈழத்தில் இறுதிகட்ட போர் நடந்தபோது, அதை தடுத்து மக்களின் உயிரை காப்பாற்ற உருப்படியான நடவடிக்கையை திமுக எடுக்கவில்லை என்பதும், மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் எழுந்த தன்னெழுச்சி போராட்டங்களை முன்னின்று அடக்கியது என்பதும்தான்.
காங்கிரஸ் கூட்டணி
தொடர் ஊழல்களால், அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் மக்களின் மனநிலை இருந்ததால் அக்கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த திமுக படுதோல்வியை சந்தித்தது.
அடாவடி அரசியல்
சாதிக் பாட்ஷா மர்ம சாவு, தினகரன் அலுவலகம் எரிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் திமுகவுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டன. குடும்ப சண்டை வெகுவாக திமுகவுக்கு அடி வாங்கி கொடுத்தது. குறுநில மன்னர்களை போல திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் அடாவடி அதிகாரம் செலுத்தியதை கருணாநிதியால் கட்டுப்படுத்த முடியாததும் தோல்விக்கு காரணம்.
இப்போதும் திருந்தவில்லை
இந்த சட்டசபை தேர்தலிலும், திமுகவை வெற்றிபெறச் செய்ய மேற்கூறிய காரணங்களில் பெரும்பாலானவை மாறவேயில்லை. இந்தியா முழுக்க விரட்டியடிக்கப்பட்டு வரும், அதே காங்கிரசோடுதான் திமுக கூட்டணி வைத்தது. அப்போதே, திமுகவின் தோல்வி பாதி உறுதியாகிவிட்டது.
குடும்ப சண்டை
திமுகவின் குடும்ப சண்டை இந்த தேர்தலிலும் நீடித்தது. மதுரை பக்கம் செல்வாக்கு கொண்ட அழகிரியை திமுக புறக்கணித்தது. அவரது ஆதரவாளர்கள் உள்ளடி வேலை செய்தனர். மதுரை மாவட்டத்தில் திமுக படுதோல்வியடையும் என்று அழகிரி பேட்டியே கொடுத்தார்.
புது ரத்தம் பாயவில்லை
கடந்த ஆட்சியின்போது திமுகவில் அதிகாரம் செலுத்திய, பல பெரும் புள்ளிகளுக்கு, இந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கியது திமுக. கட்சிக்கு ஸ்டாலின் புது ரத்தம் பாய்ச்சுவார் என்று எதிர்பார்த்த பொதுவான வாக்காளர்களுக்கு, இது ஏமாற்றத்தை தந்தது.
பின்னுக்கு தள்ளப்பட்ட ஸ்டாலின்
93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியே இம்முறையும் முதல்வர் வேட்பாளர் என்று திமுகவால் அறிவிக்கப்பட்டதும், இளம் வாக்காளர்களை ரசிக்க வைப்பதாக இல்லை. ஒருவேளை ஸ்டாலினை முன்னிருத்தியிருந்தால் களத்தின் காட்சிகள் மாறியிருக்கலாம்.
வாக்குகள் சிதறல்
திமுக நம்பிக்கொண்டிருந்தது ஜெயலலிதா அரசுக்கு எதிரான வாக்குகளை மட்டுமே. இந்த வாக்குகள் இம்முறை மக்கள் நல கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் என பல கட்சிகளுக்கும் பங்காக போய் விட்டது. இதுவும் திமுகவால் வெல்ல முடியாததற்கு காரணம்.
மத வாக்குகள்
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை தொடர்ந்து கருணாநிதி ஏற்படுத்திவருகிறார். இந்துக்கள் பண்டிகை தினத்தின்போது மட்டும், விடுமுறை தினம் என்று திமுக தொலைக்காட்சி கூறுவது வழக்கம். இதை பாஜக போன்ற வலதுசாரி கட்சிகள் வசதியாக பயன்படுத்தி வருகின்றன. அதேநேரம், ஒருபக்கம் இந்துக்களையும் பகைக்காமல், இஸ்லாமியர் உள்ளிட்ட பிற மதத்தவரையும் பகைக்காமல் கம்பிமேல் நடந்து சாதிக்கிறார் ஜெயலலிதா.
பரவாயில்லை
இத்தனை காரணங்கள் இருந்தும், அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பெருமளவுக்கு ஈர்த்துள்ளது திமுக. தேர்தல் வாக்குறுதிகளும் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. எனவேதான் கடந்த தேர்தலை போல படுதோல்வியை சந்திக்காமல் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக.