எச். ராஜா என்ன பேசினாலும் பாஜக தலைமை அமைதி காத்தால் எப்படி!
எச்.ராஜாவிற்கு மத்திய, மாநில பாஜக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
சென்னை: எச்.ராஜா என்ன திருவாய்மொழி உதிர்த்தாலும் அதை கண்டும், காணாமல் போவதுதான் மத்திய, மாநில பாஜகவின் போக்கா என தெரியவில்லை.
விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தை மிகவும் கொச்சையாக வசைபாடியுள்ளார். கூடவே தமிழக காவல் துறையினரையும் மிகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ட்விட்டரில் கண்டனம்
அமைச்சர் ஜெயக்குமார் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் ராஜாவுக்கு எதிர்ப்பைதான் பதிலாக அளித்து வருகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இப்போது வரை மவுனம் காப்பது பாஜகதான். மாநில பாஜகவும் சரி, மத்திய பாகவும் சரி இதுவரை எச்.ராஜா பேசும் தகாத வார்த்தைகளுக்கும், அபத்தமான, அபாண்டமான ட்விட்டர்களுக்கும், நாகரீகமற்ற செயலுக்கும் இதுவரை கண்டனங்களை செய்தது கிடையாது.
டிஸ்மிஸ் செய்தார்களா?
சொல்லப்போனால் ராஜா இதுவரை தமிழகத்தில் பேசிய பேச்சுக்களுக்கு எல்லாம் அவரை பாஜக தலைமை தாமாக முன்வந்து டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். அல்லது நாம் எந்த பதிவு, கருத்தை சொன்னாலும் இப்படி தமிழக மக்கள் ரவுண்டு கட்டி அடிக்கிறார்களே என்று நினைத்தாவது எச்.ராஜா தார்மீக அடிப்படையில் பதவியை விட்டு போயிருக்க வேண்டும்.
தலைமையின் மவுனம்
மற்ற விஷயங்களில்தான் பாஜக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் என்பது மரியாதைக்குரிய, வணக்கத்திற்குரிய ஒரு துறை ஆகும். ஒரு நீதித்துறையை இவ்வளவு கொச்சையாக யாராலும் கேவலப்படுத்தவே முடியாது. ஆனால் பாஜகவின் மாநில, மத்திய தலைமை ஏன் வாய் மூடி இருக்கிறது?
தடம் மாறி பயணம்
எதிர்கட்சி, எதிர் முகாம் மீது கருத்து மாறுபாடுகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள் இருந்தாலும் நாகரீகமான நடவடிக்கைகளில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை உணர்வு கூட அற்றவர்களாக இருக்கும் இந்த செயலை எப்படி கண்டும், காணாமலும் இருக்க தலைமையால் முடிகிறது? தமிழகத்தில் நல்ல மாதிரியாக சென்று கொண்டிருந்த அரசியல் நாகரீக களம் தற்போது தடம் மாறி பயணித்து கொண்டிருப்பதற்கு மூல காரணம் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் போன்ற இந்துத்துவா அமைப்புகளே என்பதை மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக கண்டும், உணர்ந்தும்தான் வைத்திருக்கிறார்கள்.
சு.சாமிதான் துவக்கமே
குறிப்பாக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு இத்தகைய வன்முறை சம்பவங்களும், அநாகரீக அரசியல் வார்த்தைகளும், இந்தியா முழுவதும் படர ஆரம்பித்துவிட்டது. இது தற்போது தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதை தமிழகத்தில் துவக்கி வைத்தவர், பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியே. கேலி-கிண்டல் என்ற பாணியில் இவர், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு, இறுதியில் அது தன் சொந்த கருத்து சொல்ல தொடங்கினார்.
கற்பூரம் அடிக்காத குறை
இவராவது பரவாயில்லை, பேசியது தன் சொந்த கருத்து என்கிறார். ஆனால் அவரை தொடர்ந்து வந்த எச்.ராஜாவோ வன்முறையை தூண்டும் பாணியில் பேசுவதை எல்லாம் பேசிவிட்டு, அதில் உள்ளதும், பேசியதும் தான் கிடையாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் பாஜக தலைவர்களும் கண்கூடாக பார்த்து வருகிறார்கள்தானே?
ராஜா மீது பயமா?
நேற்று முதல் ராஜாவின் பேச்சு வைரலாகி வர ஆரம்பித்துவிட்டது. நெட்டிசன்கள் அவரது பேச்சை தாறுமாறாக கிழிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழக மக்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் ராஜாவை எதிர்க்காமல் தலைமை தயங்குகிறது என்றால், அவர் மீதான பயம் காரணம் என்று எடுத்து கொள்ளலாமா? பாஜகவை சேர்ந்த ஒரு தலைவரும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்?
அசைன்மெண்டா?
ராஜா கருத்தை அனைவருமே ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா? அல்லது இப்படி பேசி தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி மக்களை துண்டாட வேண்டும் என்ற அசைன்மெண்ட் ராஜாவுக்கு தரப்பட்டிருக்கிறதா?
தியாகத்துக்கு அவமானம்
எப்படி இருந்தாலும் சரி, எதுவானாலும் சரி, பாஜகவின் இந்த போக்கு கண்டனத்துக்குரியதுதான். முதலில், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த அரசியல்வாதிகள், ‘பண்பு மறந்து, வார்த்தை தடித்து' அவதூறுகளை வீசுவதை இனி நிறுத்திக் கொள்வதுடன், இத்தகைய சூழல் இனி ஒருபோதும் வராமல் தடுப்பதும் தமிழக பாஜக அரசியல் தலைவர்களின் பொறுப்பேயாகும். இனியும் ராஜா இவ்வாறு பேசுவதும், அதற்கு பாஜக தலைமை ஒத்து ஊதியும் வந்தால், அது நமது முன்னோர்களின் தியாகத்தை அவமதிப்பது போலாகும் என்பதை உணர வேண்டும்!!