இது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை- டாக்டர் ராமதாஸ்
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவுகள் பண நாயகத்துக்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்தவாறே மூன்று தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை. தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் கடந்த மே மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணம், மது, பரிசுப் பொருட்களை வாரி இறைத்தனர்.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று பண வெள்ளம் பாய்ந்ததில்லை என்று கூறி இந்த இரு தொகுதிகளின் தேர்தல்களையும் ஆணையம் ஒத்திவைத்தது. தேர்தல்கள் எதற்காக ஒத்திவைக்கப்பட்டனவோ, அதற்கு காரணமாக குறைபாடுகள் சரி செய்யப்படாமலும், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்த இரு கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதி நீக்கப்படாமலும் அத்தொகுதிகளுக்கும், திருப்பரங்குன்றத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு இந்த தொகுதிகளின் மீது சிறிதளவும் இல்லை. வழக்கம் போலவே இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தன. பொதுத்தேர்தலின் போதாவது, ஓரளவு கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் இருந்தன. ஆனால், இந்த தேர்தலின் போது கட்டுப்பாடும், கண்காணிப்பும் சிறிதும் இல்லை. அதனால், அதிமுகவும், திமுகவும் தேர்தல் விதிகளை காற்றில் பறக்கவிட்டு முறைகேடுகளை அரங்கேற்றின.
துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட அதிமுகவினர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை திமுகவினர் எதிர்த்ததால், அதேகாரணத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த திமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர். இவை அனைத்தையும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும், இந்தியத் தேர்தல் ஆணையமும் மவுனசாட்சியாக வேடிக்கை பார்த்தனர்.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் மே மாதம் அதிமுக மற்றும் திமுகவினர் நடத்திய முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை விவரங்களைக்கூட வெளியிடாமல் கமுக்கமாக வைத்திருந்து இரு கட்சிகளுக்கும் சாதகமாக செயல்பட்டது ஆணையம். அந்த விசாரணை கூட முடிவடையாத நிலையில், அவசர அவசரமாக தேர்தலை நடத்த வேண்டியது ஏன்? என்ற வினாவுக்கு தேர்தல் ஆணையத்தால் பதிலளிக்க முடியவில்லை. தேர்தல் முறைகேடுகள் மற்றும் பண வினியோகம் குறித்து பா.ம.க. சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மொத்தத்தில், தேர்தல் ஆணையத்தை துணைக்கு வைத்துக் கொண்டு பண வினியோகம் நடத்திய இரு கட்சிகளில், அதிக பணம் கொடுத்த அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு பதிலாக பணநாயகம் வெற்றி பெறுவதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பணநாயகத்துக்கு எதிரான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளிலும் பணநாயகத்தை மீறி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்த ஜனநாயகவாதிகளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.