பேசாம இருக்கலாமே, இதெல்லாம் நமக்கு தேவையாண்ணே!
அழகிரி அரசியலை பொறுத்தவரை இனி என்ன செய்யலாம்?
சென்னை: பேரணி நடத்தி அடுத்தவங்களுக்கு பலத்தை காட்டறேன்னு போய் தன் பலத்தை தானே தெரிந்து கொண்டதுதான் மிச்சம்!
10 ஆயிரத்துக்கும் குறைவாக வந்த கூட்டம் அழகிரி பார்வைக்கு மட்டும் ஒருலட்சம் பேர்களாக தெரிந்தது போல. "ஒரு லட்சம் பேரையும் நீக்க முடியுமா?" என்று சவால் விடும் சத்தம் அப்போதும் நிற்கவில்லை. அங்கிருந்தது பாதி பேர் அதிமுக தொண்டர்கள்தான் என தெரிந்தும் அழகிரி தன் வைராக்கியத்தையும், ஈகோவையும், மிரட்டலையும் விடவில்லை.
நல்ல மனிதர்
இந்த 3 குணத்தை மட்டும் விட்டுவிட்டால் அழகிரி போன்ற சிறந்த மனிதரை நாம் பார்க்க முடியாது. ஆனால் இப்போது எல்லாமே எல்லைமீறி போய்விட்டது. முதலில் அழகிரி விவகாரத்தை பொறுத்தவரை எது நடந்தாலும் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே நடந்திருக்க வேண்டும். கருணாநிதியே கட்சியை விட்டு வெளியேற்றிய ஒருவரை மீண்டும் கட்சிக்குள் எடுக்க யாருமே தயாராக இல்லை. அதுவும் இப்போது இவ்வளவு பிரச்சனை செய்து, மிரட்டல் விடுத்த பின்பு திமுகவில் நுழைய இருந்த கொஞ்சநஞ்சம் வாய்ப்பும் போய்விட்டது.
ஏனோ யோசிக்கவில்லை
ஆனால் அழகிரி மீண்டும் கட்சிக்குள் இணைத்து கொள்வதால், உண்மையிலேயே சில நல்ல விஷயங்கள் திமுகவில் நிகழ வாய்ப்புள்ளது. அழகிரியின் மனசுக்கும், தொண்டர்கள் மீது செலுத்தும் அன்புக்கும், அவர் கட்சியில் இறங்கி வேலை பார்ப்பார். இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட அழகிரி சிறப்பாகவே செயல்படுவார். தென் தமிழகமே அழகிரிக்கு அத்துப்படி.. இதனை ஸ்டாலினும் கொஞ்சம் பரிசீலித்திருக்கலாம். அழகிரியை சேர்ப்பதால் திமுகவுக்கு நிச்சயம் இழப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. கூடுதல் பலம்தான். தென் மாவட்டங்களில் ஸ்டாலின் சற்று ரிலாக்ஸ்டாகவே இருக்கலாம்.. அழகிரி சமர்த்தாக இருக்க சம்மதித்து கட்சியில் சேர்ந்தால்தான்.
எப்படி எதிர்கொள்வது?
ஆனால், அழகிரியை மீண்டும் இணைத்து கொள்ளும் பட்சத்தில் அழகிரி அஸ்திவாரத்தையே ஆட்டிவிடுவாரோ என்றுதான் கிலி ஏற்படுகிறது. அப்படியே சேர்த்து கொண்டாலும், என்ன பதவி கொடுப்பது என்பதிலிருந்து, அங்கிருக்கும் மூத்த தலைவர்களிடம் பிரச்சனை எழ வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல, அழகிரியை மீண்டும் சேர்த்து கொண்டால், இதற்குமுன்னர் அவரை எதிர்த்தவர்களோ, தொண்டர்களோ, கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள். இதை எப்படி எதிர்கொள்வது?
உடன்படுவார்களா?
ஒருவேளை அவரை கட்சிக்குள் சேர்க்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு விட்டால், அழகிரி என்ன செய்ய போகிறார்? புதுகட்சி ஆரம்பிக்க முடியுமா? அல்லது பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டு வைக்க முயற்சி நடக்குமா? இப்படி எது நடந்தாலும், அதற்கு அழகிரியையே நம்பிக் கொண்டிருக்கும் தொண்டர்களின் கதி என்னவாக இருக்கும்? கட்சி தொண்டர்களும் அழகிரி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவார்களா? உடன்படுவார்களா? அப்படி இருக்கும் தொண்டர்களும் பிரிந்துவிட்டால் அழகிரி மீண்டும் கூட்டத்தை சேர்க்க எவ்வளவு பாடுபடுவார்?
10 பேர் கதி?
திமுகவை துண்டாட வழக்கம்போல் பாஜகவினர் நூல்விடத்தான் பார்ப்பார்கள். அழகிரியை இழுக்கத்தான் ரவுண்டு கட்டுவார்கள். ஆனால் தப்பித்தவறி அழகிரி பாஜக பக்கம் போய்விட்டால் இருக்கும் 10 ஆயிரம் தொண்டர்களையும் இழக்க வேண்டியதுதான். ஏதோ ஒரு காரணத்திற்காக, ஏதோ ஒரு விஷயத்துக்காக அந்த 10 ஆயிரம் பேர் தன்னை நம்பி இருப்பதை அழகிரி யோசித்து பார்க்க வேண்டும்.
அமைப்பை தொடங்கலாம்
இனி திமுகவிலும் நுழைய வாய்ப்பு இல்லை... பாஜகவிலும் நுழைந்து விடக்கூடாது.. காங்கிரசிலும் சாத்தியம் இல்லை.. எனவே தன்னையே தலைவனாக ஏற்று கொண்டிருக்கும் அந்த 10 ஆயிரம் தொண்டர்களுக்காக தனி கட்சியை வேண்டுமானால் தொடங்கலாம். கட்சி என்றாலும் இந்த பலத்தை கொண்டு முடியாது. அதனால் ஒரு அமைப்பு தொடங்கலாம். பின்னாளில் கூட்டணி அமைத்து ஒரு சீட்டுக்கூட வாங்கலாம். இது ஒன்றுதான் அழகிரிக்கு இருக்கும் ஒரே சான்ஸ்!
இப்போதைக்கு அழகிரியைப் பார்த்து, பேசாமல் இருக்கலாமே, இதெல்லாம் நமக்குத் தேவையாண்ணே என்று பாசத்துடன்தான் கேட்கத் தோன்றுகிறது.