இப்படிப்பட்ட "தவ வாழ்வு" எல்லோருக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பயணங்களையும், திட்டங்களையும், ஏற்பாடுகளையும் பார்த்தால் அவர் பேசி வரும் "தவ வாழ்வு" என்பதற்கான அர்த்தம் என்ன என்ற பெரும் சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியாது.
மக்களுக்காக நான், தவ வாழ்வு வாழ்கிறேன் என்றெல்லாம் பேசி வரும் முதல்வர் ஜெயலலிதா, அதற்கு நேர் மாறாக இருப்பதுதான் மிகப் பெரிய முரணாக காட்சி தருகிறது.
நமக்குப் பளிச்சென தெரியும் இந்த முரண்பாடுகள், முதல்வருக்கு மட்டும் தெரியாமல் போவது ஏன் என்பது இன்னொரு ஆச்சரியமாகும்.
எல்லாத் தலைவர்களும்தான் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். கூட்ட நெரிசலும் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் எங்குமே உயிரிழப்பு ஏற்பட்டதில்லை. காரணம், வெயில் அடியோடு தணியும் நேரத்தில் கூட்டம் போடுகின்றனர். அதை விட முக்கியமாக கூட்டம் போடுவதைக் காட்டிலும், வேனிலும், நடந்தும் போய் மக்களைச் சந்தித்து ஓட்டு வேட்டையாடுகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதுபோல செய்ய பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவரது பிரசாரத்தில் எளிமை இல்லை, மக்களுக்கு நிம்மதி தரும் வகையில் இல்லை. மாறாக அவர்களை காய்ச்சி எடுத்து கடுமையாக தண்டிப்பது போலவே உள்ளது.
உதாரணத்திற்கு சில...
முதல்வர் ஜெயலலிதாவுக்குப் போடப்படும் மேடையில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வேட்பாளர்களுக்கு கூட இடமில்லை. அவரது மேடையில் ஏகப்பட்ட ஏர் கூலர்கள் மற்றும் ஏசிகளைப் பொருத்தி ஜெயலலிதாவுக்கு ஒரு சொட்டு வியர்வை கூட வராதவாறு பார்த்துக் கொள்கின்றனர்.
அதேசமயம், அவரது பேச்சைக் கேட்க வரும் மக்களை கடும் வெயிலில் பல மணி நேரம் உட்காரவைத்து வெந்து அவிந்து போகச் செய்கின்றனர். பந்தல் கூட போடப்படுவதில்லை. அவர்களை பாதியில் எழுந்து போகவும் அனுமதிப்பதில்லை. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக காட்சி தரும் அந்த மக்களைப் பார்த்துப் பேசுகிறார் ... நான் தவ வாழ்வு வாழ்கிறேன் என்று.
மேடையில் முழுக்க முழுக்க ஏசியை வைத்துக் கொண்டு ஜாலியாக பேசுவதுதான் தவ வாழ்க்கையா எனறு யாரும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்க முடியாது... கேட்டால் அவர்களுக்கு சிறை வாழ்வுதான் கிடைக்கும்!
சென்னையில் ஆரம்பித்து தொடர்ந்து கடும் வெயிலில் கூட்டம் போட்டு மக்களை சாகடித்து வந்த அதிமுகவால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். சேலத்தில் 2 பேர், விருத்தாச்சலத்தில் 2 பேர், அருப்புக்கோட்டை கூட்டத்திற்குப் போன ஒருவர் என 5 உயிர்களைக் காவு கொண்டுள்ளது ஜெயலலிதாவின் பிரசாரம். இதுகுறித்து பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போதுதான் புத்தி வந்துள்ளது அக்கட்சிக்கு.
இன்று திருச்சியில் நடைபெறும் கூட்டத்தை மாலை 6.30 மணிக்கு மாற்றியமைத்துள்ளனர். மேலும் கூட்டத்தையும் 3 மணிக்கு மேல்தான் கூட்டி வருமாறும் உத்தரவிட்டுள்ளனறாம். மேலும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வரப் போகிறாராம் ஜெயலலிதா. காரில் அவர் வரப் போவதில்லையாம்.
இந்தியாவிலேயே.. ஏன் உலகத்திலேயே இப்படிப்பட்ட ஒரு உன்னதத் தலைவரை இதுவரை யாரும் கண்டதில்லை...!