இப்ப பேசும் பொன்னையா இத்தனை நாள் என்னய்யா செய்தீர்? டி.ராஜேந்தர் அதிரடி!
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறும் பொன்னையன் இத்தனை நாள்கள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணம் அடைந்தது வரை வாய் திறக்காத பொன்னையன் தற்போது பொங்கி எழுந்தது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா உடல்நிலைக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாள்கள் சிகிச்சைப் பின்னர் அவர் மரணமடைந்தார். இந்நிலையில் ஆட்சி, அதிகாரப் போட்டி, உள்கட்சி பூசல் காரணமாக அதிமுக மூன்றாக கூறுபோடப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் மனு கொடுத்தனர். ஜெயலலிதா மரணம், நீதி விசாரணை குறித்து பதவியில் இருந்த முதல்வர் பன்னீர் செல்வம் பதவி பறிபோனதைத் தொடர்ந்து இப்போது கேள்வி எழுப்புவது ஏன் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிய வருகின்றனர்.
சென்னை திநகரில் லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்த வரை இருந்த 175 நாள்களில் ஜெயலலிதா குறித்து அவர் வாய் திறக்காதது ஏன்?
இந்நிலையில் சின்னம்மா அவர்கள்தான் கட்சிப்பதவியையும், ஆட்சியையும் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பொன்னையன் இத்தனை நாள்கள், சசிகலாவுக்கு எதிரான கருத்துகளையும், ஜெயலலிதா மரணம் குறித்து மர்மத்தையும் பேசுவது ஏன்? இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்?
அந்த 137 நாள்கள் நடந்தது என்ன? என்ன? என்ன?.... என்று எண்ண, எண்ண, எண்ண,... நெஞ்சு கொதிக்கிறது என்றார் அவர்.