வண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு எனது பேச்சு காரணம் இல்லை.. என்ன பேசினேன் தெரியுமா? லியோனி விளக்கம்
Recommended Video
சென்னை: திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி வண்ணாரப்பேட்டையில் கூட்டம் நடத்திய பிறகுதான் அங்கு கலவரம் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், தான் தவறாக ஏதும் பேசவில்லை என லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற இஸ்லாமியர்களின் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நகரங்களிலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறுகையில், தவறான புகைப்படத்தை வைத்து வதந்தி பரப்பி வண்ணாரப்பேட்டையில் கலவரம் ஏற்பட்டதாகவும், விஷமிகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேபோல அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வண்ணாரப்பேட்டையில் திமுக கூட்டம் நடத்தியது. அக்கட்சி பேச்சாளரான திண்டுக்கல் ஐ லியோனி உரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு பிறகு தான் போராட்டம் வெடித்தது. வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, பாபர் மசூதி தீர்ப்பை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்களால், குடியரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஏற்க முடியவில்லை என்றுதான் நான் தெரிவித்திருந்தேன்.
தங்கள் மார்க்கத்தை விடவும் இந்த மண்ணை இஸ்லாமியர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக விளங்குகிறது என்பதையும் நான் தெரிவித்திருந்தேன்.
ஒருவரின் உரிமைகள் பறிக்கப்படும் போது இயல்பாக அவர்கள் கோபப்படுவார்கள். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவார்கள். இதில் தூண்டிவிட எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், கிறிஸ்தவர் என யார் பாதிக்கப்பட்டாலும், திமுக போராடும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.