அதிமுகவுக்குதான் அதிகார பசி... தட்டி கேட்க வேண்டிய திமுகவின் கைகளை கட்டிபோட்டது யாராம்?
தமிழகத்தின் உரிமைகள் எல்லாவற்றையும் அதிகார பசிக்காக அதிமுக இழந்துவிட்டது. ஆனால், இதை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய திமுக என்ன செய்தது?
சென்னை: நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாயிகள் பிரச்சனை, செயலகத்தில் ஐடி ரெய்டு என எல்லாவற்றையும் அதிமுக ஆட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டில் சாதனையென்று எதுமில்லை. எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.
முதல் 4 மாதங்கள் ஜெயலலிதா தமிழகத்தை ஆண்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ நகர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. அதற்கப்புறம் கேட்கவா வேண்டும். அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5ல் மரணமடைந்தார். ஜெயலலிதாவிற்குப் பின்னர் ஓபிஎஸ், பழனிச்சாமி என இரண்டு முதல்வர்கள் மாறிவிட்டனர். இந்த ஓராண்டில் ஒரு சாதனையும் இல்லை.
என்ன செய்தது எதிர்க்கட்சி?
இவர்கள்தான் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றால் எதிர்க்கட்சியாக திமுக என்ன செய்தது என்று பார்க்க வேண்டியது அவசியம். அவர்களாவது இந்தப் பிரச்சனைகளை தீர்க்க வழி கண்டார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களால் முடியவும் இல்லை.
நீட் தேர்வு
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி மாநில அரசு அனுப்பியது. அதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா, தொடர்ந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தார். என்றாலும், அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை.
ஹைட்ரோ கார்பன்
இதே போன்றுதான் ஹைட்ரோ கார்பன் பிரச்சனையிலும் எதிர்க்கட்சியாக செயல்படும் திமுகவால் எதுவும் செய்ய முடியவில்லை. நெடுவாசல் மக்களின் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட ஸ்டாலின் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் தொடர்ந்து மத்திய அமைச்சர்களை பார்த்து பேசியும் ஒன்றும் மசியவில்லை.
விவசாயிகள் பிரச்சனை
விவசாயிகளின் போராட்டத்திலும் இதேதான் நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் போராட்டக்காரர்களை நேரடியாக டெல்லிக்கே சென்று சந்தித்தார். இதுகுறித்து பிரதமரிடம் பேச நேரம் ஒதுக்கும்படி பல முறை கேட்டும் மோடி நேரம் ஒதுக்கித் தரவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு பலனும் கிடைக்காமல் சென்னை திரும்பினார்கள்.
தீர்க்க முடியவில்லை
ஆக, இந்த ஓராண்டாக தமிழகத்தில் எழுந்த எந்த பிரச்சனையையும் ஆளும் கட்சியாலும் தீர்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாலும் தீர்க்க முடியவில்லை. அவர்களால் பேச மட்டுமே முடிந்தது. ஒட்டு மொத்தமாக பார்த்தோமானால், தமிழகத்தில் அதிமுக நினைத்ததும் நடக்கவில்லை. திமுக நினைப்பதும் நடக்கவில்லை. பாஜக என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதனை மட்டும் திட்டமிட்டு தெளிவாக நடத்தப்பட்டு வருகிறது.
வெற்றிடம்
பாஜகவையும், மத்திய அரசையும் எதிர்த்து பேசும் வலிமையான தலைமையான திமுக தலைவர் உடல் நலமின்றி இருக்கிறார். ஜெயலலிதா மறைந்துவிட்டார். இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பாஜக தனது ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது. இது புரிந்தாலும் புரியாதது போல் உள்ளது பழனிச்சாமி அரசு.