சென்னையில் இரவில் கொட்டும் மழை.... சேகரிக்க என்ன வழி செய்தது அரசு?
சென்னையில் இரவு நேரங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் பெய்யும் மழைநீரை சேமிக்க அரசு என்ன செய்தது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது இரவில் மழை பெய்து வருகிறது. கடும் வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில் மழை நீரை சேமிக்க அரசு என்ன செய்தது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 1.7 செ.மீ, சோழவரத்தில் 17 செ.மீ மழையும் பெய்துள்ளது. பகலிலும் வானம் இருண்டு, தூறல் போட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும் என மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் பெய்கின்ற மழைநீர் நிலத்துக்குள் சென்று நிலத்தடி நீரை உயர்த்துவதற்குப் பயன்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊற்று நீருக்காக விழித்திருந்த துயரம்
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத கடும் வறட்சி நிலவியது. ஒரு குடம் குடிநீருக்காக பல மைல்கள் நடந்து சென்று, ஊற்றுகளில் நீரைத் தோண்டியெடுத்த அவலம் திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடந்தது. சில ஊர்களில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் இரவெல்லாம் கிணற்றடியில் விழித்திருந்து, தண்ணீர் ஊறியதும் இறைத்த துயரமும் நடந்தது.
கல்குவாரி நீரைக் குடித்த சென்னை
சென்னையில் குடிநீர் ஆதாரங்களான செம்பராம்பாக்கம், பூண்டி, புழல், மற்றும் சோழவரம் ஏரிகள் பூர்த்தி செய்து வந்தன. ஆனால், கடும் வறட்சியின் காரணமாக இந்த நான்கு ஏரிகளும் காய்ந்து போயின. அதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாங்காடு பகுதிகளில் இருந்த கல்குவாரிகளில் தேங்கி நின்ற நீரை சுத்திகரித்து குடிநீர் வாரியம் வழங்கியது.
தனியார் கேன் நீரே கதி
சென்னையில் வாழும் மக்களின் குடிநீர்த் தேவை நாள் ஒன்றுக்கு 850 மில்லியன் லிட்டர். ஆனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் வாரியம் சென்னைக்கு வெறும் 450 மில்லியன் லிட்டர் குடிநீரையே வழங்கி வருகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு தனியார் கேன் விற்பனையாளர்களையே நம்பியுள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு தொட்டி என்னாச்சு?
கடந்த 2001-2006 ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழை நீரை சேமிக்க வீடுகளில் மட்டுமில்லாது அனைத்து இடங்களிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி கட்ட வேண்டும் என அதிரடி உத்தரவிட்டார். ஆனால், அதன்பிறகு மழை நீர் சேகரிப்புக்கென அரசு எந்த திட்டங்களையும் செய்யாத காரணத்தால் தான், பெருவெள்ளம் வந்த அடுத்த ஆண்டிலேயே வறட்சியை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
என்னங்க சார் உங்க திட்டம்?
தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீர் மேலாண்மைக்காக குடிமராமத்துப் பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால், சென்னையின் குடிநீர் தேவையைப் போக்கும் நான்கு ஏரிகளையும் தூர் வரவில்லை. மேலும், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் கரை வலுவிழந்துள்ளது என பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்யவில்லை.
தண்ணீர் விஷயத்தில் அலட்சியமா?
தற்போது சென்னையில் இரவு நேரங்களில் பெய்துவரும் மழை நீரை சேமிக்க எந்த வழிமுறையும் அரசிடம் இல்லை. இது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுக்கு உள்ள அலட்சியத்தைக் காட்டுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இனியும் தாமதிக்காமல் வல்லுநர்களைக் கொண்டு மழைநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.