7 தமிழர்கள் விடுதலையில் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
7 தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய விரும்பினால், அதற்கு சட்ட ரீதியாக சில முடிவுகளை, மாநில அரசு எடுக்க வேண்டும்.
சட்டப்பிரிவு
இது சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால், ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய, சட்டப்பிரிவு, 435-ன் கீழ் மத்திய அரசின் அனுமதி அவசியமாகும் என்பதுதான் மத்திய அரசின் வாதமாக இருந்து வந்தது. ஆனால், மாநில அரசு இந்த சட்ட விதியின்கீழ், ஏழு பேரையும் விடுதலை செய்ய கேட்டுக் கொண்டுகூட, அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
மாநில அரசின் அதிகாரம்
எனவே, இப்போது, அந்த சட்டப்பிரிவை கொண்டுதான் விடுதலை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம், இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, 161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசால் தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்வதாக அதிரடியாக அறிவிக்க முடியும்.
அமைச்சரவை
இதற்காக தமிழக அமைச்சரவை கூட்டப்பட வேண்டும். அமைச்சரவையில், 7 தமிழர் விடுதலை தொடர்பாக வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பின்னர், அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநர் இதில் இறுதி முடிவை எடுப்பார்.
விடுதலைக்காக மனு
முன்னதாக, தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, 7 பேர் சார்பிலும், புதிதாக ஒரு மனு, தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டுதான் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கான பணிகளை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நகல் கிடைத்ததும், 7 பேரின் வழக்கறிஞர்களும் ஆரம்பிக்க உள்ளனர்.