ஜார்ஜை விடாமல் துரத்தும் குட்கா ஊழல் வழக்கு.. அரசின் பினாமிகளை குறி வைக்கும் சிபிஐ!
சென்னை: குட்கா ஊழல் வழக்கு விவகாரத்தில் அதன் அதிபர் மாதவராவிடம் நடத்திய விசாரணையில் சிபிஐ அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று வருகிறது.
அதிமுக அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவைகளில் குட்கா ஊழல் வழக்கும் ஒன்று. அந்த வழக்கு தற்போது சூடு பிடித்து வருகிறது. வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும் பினாமிகளை சிபிஐ குறிவைப்பது குறித்தும் தற்போது பார்ப்போம்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழிலதிபர் மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மாதவராவின் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
கடிதம்
அந்த டைரியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அமைச்சர்கள் முதல் உயர் காவல் துறை அதிகாரிகள் வரை யார் யாருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இருந்தது. இதனை வைத்து லஞ்சம் வாங்கிய காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித் துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அந்த கடிதம் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
துருவி துருவி கேள்விகள்
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி சென்னை குட்கா தொழிலதிபர் மாதவராவிடம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது தடையின்றி குட்கா வியாபாரம் நடக்க யார் லஞ்சம் கேட்டது, தமிழக அரசுக்கு தெரிந்துதான் நடந்ததா? இந்த வழக்கில் சுகாதாரத் துறையின் பங்கு என்ன? இதற்கு முகவராக இருந்து செயல்பட்டது யார்? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
பட்டியல்
மாதவராவிடம் சுமார் 10 மணி நேரம் நடந்த தொடர் விசாரணையில் கிடைத்த தகவலையடுத்து அதிரடியாக நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கிராமத்தில் உள்ள குட்கா குடோனை பூட்டி சீல் வைத்தனர். இந்த விசாரணையின் போது யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ரெய்டு
இதன் அடிப்படையில் இன்றைய தினம் சென்னையில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, இன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. மாதவராவின் டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணை யராக அன்றைய காலகட்டத்தில் இருந்த இப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.