அகல் விளக்கை கொடுத்துச் சென்றுள்ளார் ஜெ.. எல்ஐசி சின்னம் போல கையைக் காட்டிய ஜெயக்குமார்!
ஆட்சியை அகல் விளக்கு போன்று ஜெயலலிதா கொடுத்துச் சென்றுள்ளார் என்று கையை உயர்த்தி எல்ஐசி சின்னம் போல் காண்பித்து அசத்தினார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: தமிழக அரசின் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
சரியாக காலை 10.30 மணிக்கு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் ஜெயக்குமார். பட்ஜெட் உரையைத் வாசிக்க தொடங்கிய உடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழை அவர் பாடினார். அப்போது, தாலிக்கு தங்கமாய், நாங்கள் சட்டசபையில் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நீங்கள்தானம்மா என்று ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி ஒரு கவிதை போல வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது இந்த ஆட்சியை ஒரு அகல் விளக்கு போல் எங்களுக்கு அளித்திருக்கிறார் ஜெயலலிதா என்று சொல்லும் போது, நிதி அமைச்சர் ஜெயக்குமார் தனது இரு கைகளையும் உயர்த்தி எல்ஐசி விளக்கு சின்னம் போல் காட்டினார்.
அதே போன்று, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பிய போதும், அதிமுகவினர் கைகளை மேஜையில் தட்டும் போதும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் நின்று நிதானித்து அவர்களுக்கு பதில் அளித்த சுவராஸ்யமும் நடைபெற்றது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யும் போது யார் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் பட்ஜெட் வாசிப்பார்கள்.
நிதி அமைச்சர் ஜெயக்குமார் அப்படி இல்லாமல் சில இடங்களில் ஜாலியாக பேசினார். இவர் பட்ஜெட் வாசிக்கும் போது, மேஜையை அதிமுக எம்எல்ஏ தட்டினார். அப்போது பட்ஜெட் வாசிப்பை நிறுத்திவிட்டு திரும்பி மியூசிக் போல தட்டுராரு என்று சொல்லிவிட்டு மீண்டும் பட்ஜெட்டை படிக்கத் தொடங்கினார்.