அழகிரியின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?.. அடுத்தது என்ன.. இரண்டே சாய்ஸ்தான்!
அழகிரியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர், தென்மண்டல அமைப்பு செயலாளர், தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தி, தென் தமிழகத்தின் இரும்பு அரண் என ஒரு காலத்தில் பேசப்பட்டவர் அழகிரி! ஆனால் இவை எல்லாம் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்றாக கழன்று கீழே விழ ஆரம்பித்துவிட்டது!
அழகிரியின் இந்த நிலைக்கு யார் காரணம்? கருணாநிதியா? ஸ்டாலினா? குடும்பத்தினரா? தென்மண்டல நிர்வாகிகளா, திமுக மூத்த தலைவர்களா? தொண்டர்களா? யாருமே காரணம் இல்லை. இந்த நிலைக்கு காரணம் அழகிரியேதான்!
திட்டங்கள் என்ன?
ஒரு தலைவரின் வாரிசு என்பது எவ்வளவு பெரிய விஷயம்... ஆனால் வாரிசாக இருந்து கொண்டு தந்தைக்கு மகன் செய்த நன்மைகள் என்னென்ன? தென்மண்டலங்களில் என்னென்ன களப்பணிகளில் ஈடுபட்டார்? மத்திய அமைச்சராக பொறுப்பில் உட்கார வைக்க கருணாநிதி டெல்லிக்கே சென்றாரே... சோனியாவிடம் உட்கார்ந்து பேசி, காபினட் சீட் வாங்கி தந்தும் அதை அழகிரி சரியாக பயன்படுத்தினாரா? பார்லிமெண்ட்டில் அவர் என்ன உரை நிகழ்த்தி இருக்கிறார்? 5 ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்து அவர் கொண்டு வந்த திட்டங்கள்தான் என்னென்ன?
இந்த நிலைமை தேவையா?
ஸ்டாலினாவது தமிழகம் என்ற ஒரு கூட்டுக்குள் அடைபட்டு போனார். ஆனால் அழகிரி மத்திய அமைச்சர் என்ற பதவியை வைத்துக் கொண்டு இந்திய நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? முதலில் நாடாளுமன்ற விவாதங்களில் எதிலாவது கலந்து கொண்டிருக்கிறாரா? படிக்காமலேயே அரைகுறை ஆங்கிலத்தில் லல்லுபிரசாத் நாடாளுமன்றத்தை ஒரு கலக்கு கலக்கவில்லையா? அவ்வளவு எதற்கு, நடிகர் ராமராஜன் முதல் திருமாவளவன் வரை தமிழில் உரையாற்றிவிட்டு வரவில்லையா? நாட்டின் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர், இப்போது சொந்த மாநிலத்தில் அதுவும் சொந்த கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலைமை தேவையா?
குடும்பத்திலும் பிரச்சனைதான்
தமிழகத்தில் அழகிரி இதுவரை எத்தனை அரசியல் கூட்டங்களில் அனல்தெறிக்க பேசியிருக்கிறார்? அரசியல்வாதிகளுக்கு அடிப்படை சொத்தே பேச்சுத்திறன்தானே? அதுபோல அடையாளப்படுத்தக்கூடிய அரசியல் கூட்டங்கள் எங்காவது நடந்திருக்கிறதா? சரி, குடும்பத்திலாவது யாருடனாவது உறவு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஸ்டாலின், கனிமொழி, துர்கா, ராசாத்தி அம்மாள் உட்பட எல்லோரிடமும் "ஏழரைதான்".
சுருண்டே போய்விட்டார்
ஸ்டாலின் மீதான இனம்புரியாத வெறுப்பு, அதனால் கருணாநிதிக்கு அழகிரி மேல் ஏற்பட்ட மனஸ்தாபம், எந்த விஷயத்தையும் பொறுமையுடன் அணுக தெரியாமல் வார்த்தைகளை கொட்டிவிடும் இயல்பு போன்றவைகளால் எல்லா பொறுப்பும் அழகிரியை விட்டு செல்ல ஆரம்பித்தது. கூடவே ஒட்டிக் கொண்டிருந்த திமுக மூத்த தலைவர்கள் முதற்கொண்டு பிரதிநிதிகள் வரை அழகிரியின் செல்வாக்கு சரிவை நோக்கி சென்றுவிட்டது. அதுவும் "தனக்கு பின் ஸ்டாலின்தான்" என்று கருணாநிதி அறிவித்த அன்றே, கூட ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஸ்டாலின் பக்கம் சாய்வதையும் அழகிரி கவனிக்காமல் இல்லை. இதில் கட்சியை விட்டு அவரை கருணாநிதி நீக்கியதும் ஒட்டுமொத்தமாக சுருண்டே போய்விட்டார்.
பாசக்காரர் அழகிரி
உண்மையில் மிக நல்ல மனதை உடையவர் அழகிரி. அனைவரிடம் அன்பையும், மரியாதையும், பாசத்தையும் பொழிபவர். இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட சற்று தூக்கலான பாசத்தை அழகிரியிடம் பார்க்க முடியும். தென் மாவட்ட தொண்டர்களின் வீட்டு விசேஷங்கள் முதல் துக்க நிகழ்வுகள் வரை சென்று வருபவர். ஆனால் அங்கேயே இப்போது ஆட்டம் காண தொடங்கிவிட்டதே ஏன்? கருணாநிதி மறைவுக்கு பிறகு அழகிரி ரொம்பவே நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார். நினைத்தது ஒன்று... நடந்தது வேறாகிவிட்டது! இப்போது "கட்சியில் மீண்டும் சேர்க்காவிட்டால் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்" என்று மிரட்டல் விடுப்பதில் என்ன பயன்? கட்சிக்குள் சேர்த்தால் பெரிய ஆபத்தே வந்துவிடும் என்ற அளவுக்கா திமுக தரப்பை நினைக்க வைப்பது?
இறுதி விடை என்ன?
எதை நம்பி கட்சியினுள் மீண்டும் உள்ளே சேர்ப்பார்கள்? இதோ, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் வரவிருக்கின்றன. கண்டிப்பாக அழகிரி சுயேச்சையாகத்தான் நிற்க வாய்ப்பு உண்டு. சென்ட்டிமெண்ட் பார்த்து திருவாரூரில் தனது அப்பாவின் தொகுதி என்று நினைத்து களமிறங்கலாம். கருணாநிதி மகன் என்று அனைவரும் தமக்கு வாக்களிப்பார்கள் என்றும் நம்பலாம். ஆனால் வெற்றி பெறமுடியாது. அதேபோல தனது செல்வாக்கான மாவட்டம் என்று நினைத்து திருப்பரங்குன்றத்திலும் களமிறங்கலாம். ஆனால் அங்கேயும் வெற்றி பெற முடியாது. திருவாரூரில் மோசமான தோல்வி என்றால், திருப்பரங்குன்றத்தில் சுமாரான தோல்வி... இதுதான் இறுதி விடையாக இருக்க முடியும்!
2 சாய்ஸ்தான்
அழகிரிக்கு 2 சாய்ஸ் உள்ளது. ஒன்று, தம்பிக்கு தோள்கொடுத்து கட்சியை வளர்த்து பாதுகாக்க முன்வரவேண்டும். அப்படியானால், கட்சிக்கு விசுவாசமாகவும், கட்டுப்பட்டும், களப்பணி செய்தும் பணியாற்றுவேன் என்று உறுதி கூறி ஸ்டாலினிடம் வந்து சேர்ந்தால் ஒருவேளை திமுவில் வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால், திமுகவின் எதிரிகளோடு கரம் கோர்ப்பது. இதில் இரண்டாவதை செய்தால் நிரந்தரமாக திமுகவை அவர் இழக்க நேரிடும்.
தமிழகத்துக்கு நல்லது
பல தியாகங்களை செய்து கருணாநிதி வார்த்தெடுத்த கட்சி இது. ஆயிரம் இருந்தாலும் அவரது பெயருக்கு களங்கம் வரக்கூடிய செயலை செய்யாமல், ஸ்டாலினுடன் இணைந்து, உடன்பட்டு கழக பணியாற்றுவதே கட்சிக்கும் நல்லது... அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நல்லது... தமிழகத்துக்கும் நல்லது... தன்னையே அர்ப்பணித்து சரித்திரம் கண்ட கருணாநிதியின் நற்பெயருக்கும் அதுதான் சிறப்பு!
பார்க்கலாம் "அஞ்சா நெஞ்சர்" இனி என்ன செய்யப் போகிறார் என்பதை!