கூடங்குளம் அணு உலையில் நடப்பதை எல்லாம் வெளியே கூற முடியாது: துறை தலைவர் பேட்டி
நெல்லை: அணு உலையில் நடக்கும் பணிகளை எல்லாம் வெளியே அடிக்கடி கூறுவது முடியாத காரியம் என அணுசக்தி துறை தலைவர் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் அணு உலை நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வரும் டிசம்பர் முதல் வாரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.
அது படிப்படியாக மேம்படுத்தப்பட்டு விரைவில் அதன் குறீயிடான 1000 மெகாவாட் திறனை அடையும். கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை அடைந்த பின்பு தான், வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கப்படும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகின்றது. இதனால் இது ஆபத்தானது என்றெல்லாம் பொதுமக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகி்ன்றனர். இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடப்பது எல்லாம் மர்மமாக உள்ளது. வெளியில் எதுவும் வராமல் மறைக்கப்படுகிறது என்று கூறுவது சரியானதல்ல. கூடங்குளத்தில் நடப்பவை அனைத்தும் அவ்வப்போது செய்திகுறிப்புகளாக வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு நடப்பவைகளை லைவாக உடனுக்குடன் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.