அழகிரி பராக் பராக்... நாளை விழுமா "1 லட்சம்" விக்கெட்டுகள்.. கலகல எதிர்பார்ப்பு!
அமைதி பேரணியில் நிர்வாகிகள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: திமுகவில் நிர்வாகி ரவியை நீக்கியதை அடுத்து முதல் விக்கெட் விழத் தொடங்கிவிட்டது!
நாளைக்குத்தான் அழகிரி சொன்ன பேரணி... ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற கூறிய பேரணி... தன் பலத்தை நிரூபிப்பேன் என்று சூளுரைத்த பேரணி... ஆனால் இதெல்லாம் நடக்குமா? நடக்காதா? அதற்கான அறிகுறி ஒன்றையும் அழகிரி தரப்பில் இதுவரை காணோம்.
பம்மிய அழகிரி
தன்னை சேர்த்து கொள்ளவில்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற மிரட்டல் தொனி மறைந்துபோய்... தன்னை சேர்த்து கொண்டால் திமுக தலைவரை ஏற்பேன் என்று கீழே இறங்கி வந்துகூட குரல் கொடுத்தாகி விட்டது. ஆனாலும் அழகிரியின் மிரட்டலையும் சரி, பம்மிக் கொண்டு வந்ததையும் சரி.. எதையுமே திமுக தலைமை காதில் போட்டுக் கொள்ளவில்லை என தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம்கூட அழகிரி சொன்ன வார்த்தைகளை பற்றி இப்போதுவரை சிந்தித்து பார்க்ககூட விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
பேரணி சந்தேகம்?
அழகிரி இப்படி மிரட்டப் போய் தனக்குத்தானே ஆப்பும் வைத்துக் கொண்டார். இந்த மிரட்டலால் உஷாரான திமுக தலைமை, அழகிரி ஆதரவாளர்களை தேடி போய் பேசி தங்களுடன் இணைத்து கொண்டனர். இதுதான் அழகிரிக்கு கிடைத்த முதல் அதிர்ச்சி!! அழகிரி ஆதரவாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் திமுகவில் மீண்டும் இணைந்துவிட்டார்களே, பிறகு எப்படி அழகிரியால் பேரணி நடத்த முடியும் என்ற சந்தேகம் அனைத்து தரப்பிலும் எழுந்தது.
காவல்துறையில் அனுமதி
ஆனால் ஆதரவாளர்கள் இணைந்த பிறகும், அப்போதும் அழகிரி, "ஒரு லட்சம் பேரை திரட்டுவேன் " என்று மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை உறுதிபட தெரிவித்தார்!! நாளைதான் தன்னுடைய எதிர்காலத்தையே நிர்ணயிக்க போகும் நாள் என்பதால், அழகிரி மறைமுகமாக திமுக ஆதரவாளர்களையும், அதிருப்தியாளர்களையும் மறைமுகமாக திரட்டி கொண்டுதான் இருக்கிறார். பேரணி நடத்த காவல்துறையிடமும் முறையான அனுமதியும் கேட்டுள்ளார்.
அழகிரியின் அடுத்த அதிர்ச்சி
இந்நிலையில்தான், இன்று காலை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக ரவியை நீக்கம் செய்தது!! ரவியை நீக்கம் செய்ததால் ரவிக்கு எவ்வளவு அதிர்ச்சி இருக்குமோ தெரியாது, ஆனால் அழகிரிக்கு இது இரண்டாவது அதிர்ச்சி!!
பங்கேற்பார்களா?
நாளை ஒரு லட்சம் பேரையோ அல்லது அதற்கு குறைவான ஆட்களையோ திரட்டிக் கொண்டு பேரணி நடத்த போகிறார் என்றே வைத்து கொள்வோம். அதில் கலந்து கொள்பவர்கள் யாராக இருக்கும்? எல்லோருமே திமுக-வை சார்ந்தவர்களாகத்தானே இருப்பார்கள்? இன்னும் சொல்லப் போனால் அழகிரிக்காக வருகிறார்களோ இல்லையோ மூத்த தலைவர் கருணாநிதியின் மேல் உள்ள பற்றுக்காகவாவது இந்த பேரணியில் கலந்து கொள்ள வருவார்கள்தானே?
அச்சத்தில் நிர்வாகிகள்
அப்படியென்றால், அவர்கள் அனைவர் மீதும் திமுக தலைமை நடவடிக்கை ஏதாவது எடுக்க வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அழகிரியை வரவேற்க போன ரவிக்கே இந்த நிலைமை என்றால், பேரணியில் கலந்துகொண்டால் நம் நிலைமை என்னாகுமோ, நம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்று திமுக நிர்வாகிகள் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர்.
சொன்னதை செய்வாரா?
ரவியை நீக்கியதன்மூலம் அழகிரியிடம் தன் தரப்பிலான எதிர்ப்பை இன்னும் ஆழமாகவே பதித்துள்ளது திமுக தலைமை. என்றாலும் "கருணாநிதியின் மகன் சொன்னதை செய்வேன்" என்று ஏற்கனவே கூறியுள்ளார்... நாளை பார்ப்போம்!!