என் இணையம் என் உரிமை- பூதகரமாய் உருவெடுக்கும் “நெட் நியூட்ராலிட்டி”!
சென்னை: ஆட்சிக்கு வருபவர்கள் எல்லாம் எல்லாருக்கும் இலவச இணைய சேவை, கிராமங்களுக்கும் இலவச இணைய இணைப்பு என்று கூவிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதியதாக தலைதூக்கியிருக்கும் பிரச்சினைதான் "நெட் நியூட்ராலிட்டி".
கட்சித்தலைவரில் இருந்து கடைநிலை ஊழியர் வரையில் இன்று கையில் இருப்பது ஸ்மார்ட்போன், டேப்ளட், ஐபோன் தான்.
இணையதள சமநிலை என்பது இணையதள சேவையை வழங்கும் செல்போன் சேவை நிறுவனமும், அரசும் அனைத்து இணையதள டேட்டாக்களையும் சமநிலையில் வழங்க வேண்டும், ஒரு வாடிக்கையாளருக்கும் மற்றொரு வாடிக்கையாளருக்கும் கட்டணத்தில் வித்தியாசத்தை காட்டக் கூடாது.
கொலம்பியா பேராசிரியர்:
அதேபோல் தகவல், இணையதளம், இயங்குதளம், ஆப்ஸ், தொலைதொடர்பு முறை ஆகியவற்றிலும் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதே நெட் நியூட்ராலிட்டி ஆகும். இது கொலம்பியா யுனிவர்சிட்டி மீடியா சட்ட பிரிவின் பேராசிரியர் டிம் வூவால் 2003 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது.
செல்போன்களின் தாக்கம்:
ஆரம்ப காலத்தில் செல்போன்கள் இந்தியாவில் வேகமான வளர்ச்சியை பெற்று வந்தன. இதே நேரத்தில் சேவை நிறுவனங்களின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் 800 மில்லியன் செல்போன் இணைப்புகளை வழங்கின.
உடனடி அப்ளிகேஷன்கள்:
ஆனால், அதே செயல்தான் இப்போது செல்போன் நிறுவனங்களுக்கு எதிராக மாறியுள்ளன. காரணம், இன்று அதிகரித்துள்ள உடனடி ஆப்ஸ் நிறுவனங்கள் தான்.
இணையதள சமநிலையின்மை:
உடனடி ஆப்ஸ் நிறுவனங்களும், வாய்ஸ் ஓவர் இன்டெர்நெட் ப்ரோட்டோகால் எனும் இணையதள கால் வசதி அதிகமாகி வருவதும்தான். இதன் மூலம் என்ன பிரச்னை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறிதானே வருகிறோம் என்றால் அதற்கு பதிலாய் உருவமெடுக்கிறது இணையதள சமநிலையின்மை என்ற புகார்.
டவுன்லோடு செய்தால் முடிஞ்சது:
வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் ஹேங் அவுட் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆப்ஸை இலவசமாக ப்ளே ஸ்டோர்களில் வைத்துள்ளன. அதனை டவுன்லோடு செய்து குறைந்தபட்ச இணையதள சேவை இருந்தாலே செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன.
குறையும் குறுஞ்செய்திகள்:
அதுமட்டுமின்றி வாய்ஸ் கால், வீடியோ கால் போன்றவற்றை அறிமுகப்படுத்தி தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கியுள்ளன. இதனால், தேசிய அளவில் எஸ்.எம்.எஸ் மற்றும் கால் செய்பவர்களது எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளன. இதனால், கால் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது என செல்போன் சேவை நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ட்ராயிடம் முறையிடும் நிறுவனங்கள்:
இது குறித்து செல்போன் நெறிமுறையாளரான ட்ராய் அமைப்பிடம் ஏற்கெனவே செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த பிரச்னையை முன் வைத்துள்ளன. இதில் உடனடி ஆப்ஸ் நிறுவனங்களால் செல்போன் நிறுவனங்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
வருமானம் குறையும் நிலை:
இன்றைய நிலையில் 350 மில்லியன் செல்போன் பயன்பாட்டாளர்களை கொண்ட இந்தியாவில், ஸ்மார்ட்போன் வேகமாக பரவி வரும் வேளையில், செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் பெரிய அளவில் குறையும் என கூறியுள்ளன.
ட்ராயின் கேள்விகள் இவைதான்:
இந்தப் பிரச்னையில் மக்கள் மத்தியில் என்ன மனநிலை உள்ளது. செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்துவிட்டால் உங்களுக்கு அது சிரமமாக இருக்குமா? என்ற அடிப்படையில் நெறிமுறையாளரான ட்ராய், 20 கேள்விகளை மக்கள் முன் வைத்துள்ளது.
முடிவுக்கு
இதனை நிரப்பி [email protected] என்ற ட்ராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இதற்கு வரும் பதில்களை பொறுத்து முடிவெடுக்க ட்ராய் முடிவு செய்துள்ளது.
ட்ராயின் கேள்விகளுக்கு: http://www.trai.gov.in/WriteReadData/WhatsNew/Documents/OTT-CP-27032015.pdf