ஆழ்மனது வக்கிரங்களின் வடிகால் 'சாரா' ஆப்! எங்கு பார்த்தாலும் டிரெண்ட் ஆகிறதே ஏன் தெரியுமா? #sarahah
சென்னை: 'சாரா, சாரா, சாரா..' பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் என்று எங்கே திரும்பினாலும் விரட்டி வருகிறாள் இந்த சாரா. யார் இந்த சாரா, ஏன் இப்படி எங்கே பார்த்தாலும் டிரெண்ட் ஆகிறது?
சிம்பிளாக சொன்னால், நமது ஆழ்மனது வக்கிரங்களின் வடிகால்தான் சாரா. மொட்டை கடிதாசி அனுப்பும் முந்தைய தலைமுறையின் டிஜிட்டல் வெர்ஷன்தான் இந்த சாரா 'ஆப்'
நம்மை பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என அறிந்துகொள்ள இந்த ஆப் உதவும்.
கருத்து கந்தசாமி
ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஐ.ஒ.எஸ் பிளாட்பார்மிலும் இயங்க கூடியதுதான் இந்த ஆப். டெஸ்க்டாப் வெர்ஷனும் இதில் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது https://www.sarahah.com என்ற தளத்திற்கு சென்று மின்னஞ்சல், பாஸ்வேர்டு, பயனர் பெயர் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் போதுமானது. அக்கவுண்ட் உருவானதும், அதை பேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளத்தில் போட்டு உங்களை பற்றி அதில் கருத்து கூற சக நெட்டிசன்களை வரவேற்கலாம்.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
இதில் உள்ள வேறுபாடு என்ன என்றால், பெயரை தெரிவிக்காமல், சைன்-இன் செய்யாமல் நெட்டிசன்கள் யார் வேண்டுமானாலும் உங்களை பற்றி அதில் கருத்து தெரிவிக்க முடியும். காரி துப்பமுடியும், கழுவி ஊற்ற முடியும். பாராட்ட முடியும், பழைய பாவங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் மன்னிப்பு கேட்டு நகர முடியும். ஆக மொத்தத்தில் பாசிட்டிவ்-நெகட்டீவ் என இரண்டின் பலன்களுக்கும் இந்த ஆப் கேரண்டி.
தாயகம் சவுதி
அலுவலகத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்திடம் தங்கள் குறைகளை தயக்கமின்றி தெரிவிக்க டாஃபிக் என்பவர் உருவாக்கியதுதான் இந்த ஆப். சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் சக்கைபோடு போட்ட 'சாரா' அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலும் புயலாக வீசி குறுகிய காலத்தில் இந்தியாவிற்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளாள். இதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.
கதறும் நெட்டிசன்கள்
பெயரே தெரிவிக்காமல் ஒருவரை பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்பதால், ஆழ்மனது வக்கிரங்களை கொட்டித் தீர்க்கிறார்கள் சக நெட்டிசன்கள். இதனால் இளகிய மனம் கொண்டவர்கள் இந்த ஆப் டவுன்லோடு செய்துவிடாதீர்கள் என ஆண்ட்ராய்டு ஸ்டோரில் கதறுகிறார்கள் ஏற்கனவே வசமாக வாங்கி கட்டிய நெட்டிசன்கள். எது எப்படியோ, ஒருவகையில் அழுக்குகளை கழுவி வைத்து மனதை சுத்தம் செய்ய இந்த ஆப் உதவும் என்ற நம்பிக்கையிருக்கும் வரை இதன் செயல்பாட்டுக்கு மவுசுதான்.