8 வழி பசுமை சாலை: முதல்வர் விளக்கத்துக்கு பின்பும் நீங்காத மக்கள் சந்தேகம்- எப்போது முற்றுப்புள்ளி?
சேலம் -சென்னை 8 வழி சாலை குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் அளித்த பின்னரும் மக்கள் எதிர்ப்பு தொடருகிறது.
Recommended Video
சென்னை: சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை குறித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்த பின்னரும் கூட மக்களின் சந்தேகம் தொடருகிறது. இதனால் சேலம் சுற்றுவட்டார கிராமங்களில் பதற்ற நிலை நீடிக்கிறது.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்ப உள்ள 8 வழி சாலை காரணமாக மொத்தம் மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட உள்ளது.
இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
லட்சம் மரங்கள்
இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இந்த சாலைக்காக மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.
சேலம் உருக்காலை
இந்த 8 வழி சாலைக்கு சமூக வலைதளங்களில் சிலர் வேறு காரணத்தை முன்வைத்தனர். ஆனால் சேலம் உருக்காலை என்று பொதுத்துறை நிறுவனம், இந்தியாவில் ஏற்பட்ட தொழில்புரட்சியை அடுத்து உருவானது. தமிழக முன்னேற்றத்திற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்று கூட இதை கூறலாம். 1970 களின் தொடக்கத்தில் இந்த சேலம் உருக்காலை உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்தியா முழுக்க, முக்கியமான இரும்பு, சில்வர் பொருட்கள் எல்லாம் இங்கிருந்துதான் அனுப்பப்டுகிறது. இஸ்ரோவிற்கு கூட இங்கிருந்துதான் இரும்பு அனுப்பப்படுகிறது.
முயற்சி செய்தது
இந்த பொதுத்துறை நிறுவனத்தை பல முறை, பல நிறுவனங்கள் வாங்க முயற்சி செய்தது. முக்கியமாக, இந்தியாவின் முன்னணி இரும்பு நிறுவனமான ஜிண்டால் குழுமமும் இந்த சேலம் உருக்காலையை வாங்க முயற்சி செய்தது. 2010ல் இதற்காக வெளிப்படையாக, தீவிரமாக அரசிடம் பேசப்பட்டது. அதன் முதற்கட்டமாக, மேட்டூரில் உள்ள லட்சுமி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் ஆலையை ஜிண்டால் வாங்கியது.
முடியவில்லை
ஆனால் இதற்கு மக்கள் தொடங்கி சில சமூக செயற்பாட்டாளர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் ஜிண்டால் நிறுவனம் உருக்காலையை வாங்கும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது. ஆனால் அப்போதே மத்திய அரசும், மாநில அரசும் இதை விற்கும் எண்ணத்தில்தான் இருந்துள்ளது. இதற்கு எதிராக அப்போதே மக்கள் குரல் கொடுத்து போராட்டம் செய்ததால் அப்போது கைவிடப்பட்டது.
மத்திய அரசு
அதன்பின் இந்த பிரச்சனை வேறுவிதமாக மாறியது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனம் என்ற போதிலும் சேலம் உருக்காலை நலிவுற்ற ஆலை என்று கூறப்பட்டது. பல பணியாளர்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டார்கள். இதனால் இதை தனியாருக்கு விற்க போகிறோம் என்றது. மத்திய அரசு அப்போது அளித்த, தனியார் விருப்ப பட்டியலில், ஜிண்டால் நிறுவனம் முதல் இடத்தில் இருந்தது.
மீண்டும் நடக்கவில்லை
ஆனால் அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதோடு, விவசாயிகள் பலர் விவரம் தெரிந்து உருக்காலைக்கு எதிராக போராட களமிறங்கினார். தமிழக அரசும் இதில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தது. இதனால் அப்போது உருக்காலையை விற்கும் திட்டம் மீண்டும் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
கஞ்சமலை
இந்த ஜிண்டால் நிறுவனம் தொடங்கி பல தனியார் நிறுவனங்கள், இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சேலம் உருக்காலையை வாங்க முயற்சிக்க முக்கிய காரணம் இருக்கிறது. அந்த உருக்காலை சேலத்தில் உள்ள கஞ்சமலையை நம்பித்தான் இருக்கிறது. இந்தியாவில் இரும்பு தாதுக்கள் நிறைந்த மலைகளில் இந்த கஞ்சமலைதான் முதலிடத்தில் இருக்கிறது. இதை கைப்பற்றதான் பல நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டுள்ளது.
விற்க வாய்ப்பு
அதன்பின் இந்த உருக்காலையை விரிவுபடுத்த செய்யப்பட்ட முதலீடு காரணமாக, அரசுக்கு ரூ.2300 கோடி கடன் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு வட்டி வேறு கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனால் இதை தனியாருக்கு குறைந்த விலையில் விற்பதே அரசுக்கு நன்மை பயக்கும் என்றனர். இதற்காக ரூ.500 கோடி மதிப்பு வைக்கப்பட்டு, உருக்காலை தனியாரிடம் விற்கப்படுகிறது.
வாங்க முதல் ஆள்
இதை ஜிண்டால் நிறுவனம்தான் வாங்கும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் ஜிண்டால் மட்டுமில்லாமல் பல தனியார் நிறுவனங்களும் இந்த போட்டியில் இருக்கிறது. சேலம் உருக்காலை எப்படி இவ்வளவு கடனில் மூழ்கியது என்று விவரம் எல்லாம் வெளியாகவில்லை. ஆனால் சேலம் - சென்னை இடையே போடப்படும் சாலைக்கும் இதற்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது.
சாலை எதற்கு
இந்த சாலை காரணமாக, சென்னைக்கு மிக விரைவில் செல்ல முடியும். இதனால் சென்னை துறைமுகத்துடன், சேலத்தை எளிதாக இணைக்க முடியும். இந்த இரும்பாலையில் இருந்து எளிதாக கனரக வாகனங்களை இந்த சாலையில் கொண்டு செல்ல முடியும். இதற்காகவே இந்த சாலை என்பதுதான் சமூக ஆர்வலர்கள் ஷேர் செய்த கருத்து.
முதல்வர் விளக்கம்
ஆனால் சமூக வலைதளத்தில் வெளியான இந்த கருத்துகளை சட்டசபையில் முதல்வர் எடப்பாடியார் மறுத்து விளக்கம் விளக்கம் அளித்திருந்தார். இத்திட்டத்தினால் காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி, சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் மற்றும் சில இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பசுமை வழி விரைவுச் சாலையின் நேர்பாடு, குறைவான வனப்பகுதியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு எடுக்கப்படும் வன நிலத்திற்கு ஈடாக, இரு மடங்கு அரசு புறம்போக்கு நிலம், மாவட்ட நிர்வாகத்தினரால் நில மாற்றம் செய்து, வனத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 2 மடங்காக காடு வளர்க்கப்படும் என விளக்கம் அளித்திருந்தார்.
எப்போது முற்றுப்புள்ளி?
முதல்வரின் இந்த அறிவிப்புக்குப் பின்னரும் சேலம் சுற்றுவட்டார கிராம மக்கள் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குடும்பம் குடும்பாக கைது செய்யப்படுகிற நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து அப்பகுதியில் இயல்புநிலையை விரைவாக உருவாக்க வேண்டியது அரசின் கடமை.