அதிமுக ஆட்சியில் கையில் பணம், பையில் பொருள்.. திமுக ஆட்சியில் இது நேர்மாறு : ஓபிஎஸ்
சென்னை: அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, கையில் பணத்தைக் கொண்டு சென்று, பை நிறைய பொருள் வாங்கினால் அது அதிமுக ஆட்சி என்றும், பை நிறைய பணம் கொண்டு சென்று, கையில் சிறிதளவு பொருள் வாங்கினால் அது திமுக ஆட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் ஏ.சவுந்தரபாண்டியன் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அதற்குப் பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், "திமுக ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து பேரவையில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு அன்றைய நிதி அமைச்சர் அன்பழகன் அளித்த விளக்கத்தை படித்தார். விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்ற வகையில் அந்த விளக்கம் அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர், "அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கையில் பணத்தை எடுத்துச் சென்று பையில் பொருள் வாங்குவது அதிமுக ஆட்சி. பையில் பணத்தை எடுத்துச் சென்று கையில் பொருள் வாங்குவது திமுக ஆட்சி" என்றார்.