உரக்க கத்தி சொல்லிட்டு ஓலமிட்டுக் கருகிய உயிர்கள் சொல்வது என்ன?
சென்னை: திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் தாய் தந்தை தன இரு மகள்களையும் தங்களோடு சேர்த்து தீ வைத்து தங்களையே எரித்துக் கொண்ட சம்பவம் நம் எல்லோரையும் உருக்கி கண்களை கலக்கி போட்டது. இந்த செய்தி வந்த அடுத்த நாளிலிருந்து கந்து வட்டி வழக்குகளை போலீஸார் தீவிராக அணுகுவதும், கந்து வட்டி கொடுமை தொடர்பான புகார்கள் குவிவதும் அதிகரித்துள்ளது.
இது வரவேற்கதக்கதே. அனால் இதே செயல்பாடு இசக்கிமுத்து காவல்துறையில் புகார் செய்த போதும் இருந்திருந்தால் இன்று அநியாயமாக இந்த 4 உயிர்கள் எரிந்து சாம்பலாகி இருக்காதே. இந்த சம்பவத்துக்கு காரணம் இசக்கிமுத்து வாங்கிய கடன் 1,45,000 ரூபாய் தான் . அவர் ஆறு மாதத்திற்கு முன் 1,45,000 ரூபாயை முத்துலட்சுமி என்பவரிடம் வாங்கியிருக்கிறார். பின் மாதம் 39,000 வைத்து அவர் 2,34,000 வரை கட்டியபின்பும் முத்துலட்சுமி பணம் கேட்டு இசக்கிமுத்துவை அச்சுறுத்தியிருக்கிறார்.
அந்த பண முதலைகளோடு ஜால்ரா போட்டு அந்த அப்பாவி குடும்பத்தின் உயிர் கருக காரணமாக இருந்தது இவர்களின் பிரச்சனையையை கண்டுகொள்ளாமால் விட்ட சில காவல்துறையினரே. இறந்து போன இசக்கிமுத்துவின் தம்பியும் கூட சப் இன்ஸ்பெக்டர் முருகன், காவலர் தங்கதுரை மீது மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர்களை அரசு என்ன செய்தது. சிறிய நடவடிக்கை கூட பாயவில்லையே என்பது கேள்வியை எழுப்பியுளளது.
போலீஸ் தன் பிரச்னையை தீர்க்கவில்லை என்று இசக்கிமுத்து அடுத்து கலெக்டர் அலுவலகம் போனார். ஓன்று அல்ல ஐந்து முறை மனு கொடுத்திருக்கிறார்கள் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த மனுவை முறையாக கையாண்டிருந்தால் இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். கடைசியாக வந்த புகாரை நடவடிக்கைக்கு அனுப்பியதாக கலெக்டர் கூறியுள்ளார். அப்படியானால் அது என்ன ஆனது என்பது தெரியவில்லை.
பாதுகாப்பு கருதி அரசு அலுவலகங்களில் தீயை அணைக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்படுகின்றனவாம் நல்லது. திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் 9 நுழைவாசல்களில் ஏழு வாசல்கள் அடைக்கப்பட்டு பாதுகாப்புக்காக இரண்டு நுழைவாசல்களாக மாற்றப்படுகிறதாம். நல்லது செய்யுங்கள். ஆனால் நான்கு உயிர்கள் கருக காரணமான அதிகாரிகள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன. தெரியவில்லையே.
ஒரு பிரச்சினை என்று காவல்துறையின் கதவைத் தட்டியும் காவல்துறை உதவவில்லை. கலெக்டரிடம் 5 முறை மனு கொடுத்தும் உதவவில்லை. இப்போது நான்கு உயிர்கள் போய் விட்டன. சாமானியர்களுக்கு உதவும் நிலையில் அதிகார வர்க்கம் இல்லை என்பதையே இந்த ஊருக்கு உரக்க கத்தி சொல்லிட்டு அந்த உயிர்கள் ஓலமிட்டு கருகி இருக்கின்றன. அது கிடக்கட்டும், ஒரு குடும்பம் கருக காரணமான கருப்பு ஆடுகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே மக்கள் கேட்கும் கேள்வி.
- Inkpena சஹாயா