இழுத்து வாருங்கள் எங்கள் மீனவ இனத்தின் பிணங்களையாவது உங்கள் புது கப்பலில்!
நாகர்கோவில்: பத்து நாட்களுக்கும் மேலாகி விட்டது. குமரி மீனவ மக்களின் குமுறல் இன்னும் அடங்கவில்லை. புதுக் கப்பல் மீனவர்களைத் தேடிக் கடலுக்குப் போயிருக்கிறது. எதற்காக பிணங்களைத் தேடிக் கண்டுபிடிக்கவா என்று குமரி மீனவர்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து கன்னியாகுமரியிலிருந்து வந்துள்ள ஒரு குமுறல் குரல்: குமரி மீனவ மக்கள் அலைகளிலும் அவர்களின் சொந்தங்கள் கண்ணீரிலும் தத்தளித்து சரியாக பத்து நாட்களுக்கு மேலான பின்பு தான் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு புது திட்டம் போட முடிந்திருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள தொலைபேசியில் அழைத்ததால் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க புதிதாக ஒரு கப்பலையும் கூடவே தூத்தூர் போன்ற இடங்களில் பழக்கப்பட்ட மீனவர்களையும் அழைத்துக் கொண்டு நேவி படை புதிய ஆழ் கப்பலில் தேடபபோகிறது.
இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். பல நாட்களாக மீனவர்கள் கோரிக்கை எழுப்பி, சாலை மறியல் செய்து, ரயில் மறியல் செய்து, குமரியே கண்ணீர் கடலில் கிடக்கும் போது அந்த மக்களின் கண்ணீர் குரல் அழுகையின் ஓலம் கேட்டல்லவா நிர்மலா சீதாராமன் இந்த ஏற்பாட்டை செய்ததாக அறிவிக்க வேண்டும்.
அதுவல்லவா சாணக்கியதனம்
என்ன ஒரு அதிகார தோரணை. அவர் புயல் வந்த தருணத்திலே அந்த மக்கள் எங்கள் மீனவனை தேட எங்கள் மீனவனையும் அனுப்பு என்று சொன்னார்களே. அப்போது அவர்களின் சத்தம் இந்த அம்மாவின் காதுகளில் விழவில்லையே. பாதுகாப்பு அமைச்சர் அந்த நொடியில் அல்லவா ஒரு கூட்டம் கூட்டி நேவி படையையும் அந்த பகுதி மீனவர்களையும் சேர்த்து குழுக்கள் ஏற்படுத்தி தேடுதல் வேலையை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும். அது அல்லவா பாதுகாப்பு அமைச்சரின் சாணக்கியதனம் .
தமிழரே இப்படி இருந்தால்
சாமானிய மீனவர்களை உருக்கமான குரலில் ஆறுதல் சொல்ல வேண்டிய அவர் அன்று அந்த சாமானிய மக்களை பார்த்து எண்ணையில் சிதறிய கடுகு போல தானே உரக்க குரலில் உணர்வற்ற வார்த்தைகளை தேடுதல் தொடரும் என்று தெறித்து விட்டு போனார். இத்தனைக்கும் தமிழ் தெரிந்த தலைமை பொறுப்பில் இருக்கும் அமைச்சருக்கே தமிழனின் கண்ணீர் குரல் புரியவில்லை என்றால் தமிழ் மொழி அறியாத பிரதமர் மோடி அவர்களுக்கு இந்த தமிழனின் மீனவனின் அழுகை மொழி புரியும் என்று எப்படி எதிர்பார்ப்பது .
சிங்கம் போல இறங்கியிருக்க வேண்டாமா
காஷ்மீர் எல்லையில் சண்டையிட மட்டும் தானா இந்த பாதுகாப்பு படை எல்லாம். கடை எல்லை குமரியில் ஒரு புயல் பேரிடர் என்றால் பாதுகாப்பு படையினர் படையெடுத்து அனுப்பபட்டிருக்க வேண்டாமா. புயலின் தாக்கத்தின் போது நேவி படையினர் உள்ளே இறங்கவில்லை என்பது மீனவர் தரப்பிலிருந்து எழுந்த குற்றச்சாட்டு ஆகும். ஆபத்து காலத்தில் காப்பாற்ற தானே பேரிடர் மீட்பு குழு. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயில் குதித்து தீயை அணைத்து உயிர்களை காத்தால் தான் அது மீட்புக்குழு. தீ பயங்கரமாக எரிகிறதே எரிந்து முடியட்டும் நாங்கள் நுழைகிறோம் பிணங்களை தூக்கி பத்திரமாக தர என்று கூறாதே தீயணைப்பு படை அது போல தானே சீற்றத்தோடு சிங்கங்களைப் போல கப்பல் படையும் கடலில் இறங்கி மீனவர்களை கரை ஏறிட கை நீட்டி இருக்க வேண்டும் .
திமிங்கலம் போல நீந்தியிருக்க வேண்டாமா
தேடுதல் தொடர்கிறது என்ற அறிக்கைகள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. அங்கு அங்கே படகுகளை கரை ஒதுக்கி கடவுளும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் அப்பாவி மக்களை. மீனவ மக்களை காப்பாற்றி இருக்கிறார்கள் அந்த உயிர்களுக்காக உயிர் பயணம் வைத்து உண்மையாக பணியாற்றிய நேவி படைக்கும் தேடுதலுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் அரசுக்கும் நன்றி சொல்ல வேண்டும் நாம். ஆனால் நிச்சயமாக ஒத்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்றும் இருக்கிறது. திமிங்கலம் போல வேகமாக நீந்தி தேட வேண்டிய அரசும் அரசின் பாதுகாப்பு படையும் குமரி கடலில் நத்தை போல் மெல்ல ஊர்ந்து தேடுகிறது. ஒரு பேரிடர் புயலில் இருந்து எங்களை காப்பாற்றிடுங்க என்று அலுத்து அரற்றி அழுகை குரல் எழுப்பி, உரக்க கூவி, ரயில் மறியல் செய்து, சாலை மறியல் செய்து, கருப்பு கொடி தூக்கி உதவி கேட்கும் நிலைக்கு மீனவர்களை தள்ளியது அரசின் கண்டுகொள்ளாமை, மெத்தனப்போக்கு மீனவ இனத்துக்கு மட்டும் எதிரானது அல்ல இது ஜனநாயகத்துக்கு எதிரான மிக பெரிய கொடுஞ்செயல் .
இழுத்து வாருங்கள் எங்கள் மீனவ இனத்தின் பிணங்களையாவது
ஒக்கி புயலில் குமரியே நிலைகுலைந்து நின்றபோது புயலின் அடுத்த நாள் அல்லவா அரசு வரிசையாக கப்பலையும் ஹெலிகாப்டர்களையும் சாரை சாரையாய் இறக்கி இருக்க வேண்டும். இன்னும் 647 பேர் கரை ஏறவில்லை என்று குமரி கலெக்டர் எண்ணிக்கையை தெரிவித்திருக்கிறார். மக்கள் இன்னும் ஆயிரம் மீனவர்கள் காணவில்லை என்று சொல்ல்கின்றனர். எது எப்படியோ. இனி பிணங்களை தேடவா புது கப்பல் என்று தான் கேட்க தோன்றுகிறது. இழுத்து வாருங்கள் எங்கள் மீனவ இனத்தின் பிணங்களையாவது உங்கள் புது கப்பலில் சவ ஊர்வலமாக .
- Inkpena சஹாயா