குஷ்புவை காலி பண்ணும் நக்மா...ரஜினி ஹீரோயின்ஸின் நிஜ 'பாக்ஸிங்'
காங்கிரஸ் கட்சியில் குஷ்பு மற்றும் நக்மா ஆகிய இரண்டு சினிமா பிரபலங்களுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியில் புகைகிறது என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் கதர் சொந்தங்கள்.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் இப்போது மகளிர் காங்கிரசார் காலம் போலும். திருநாவுக்கரசர் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பினரின் குழுமோதல், கருத்து மோதல்கள் எல்லாம் இப்போது ஓரம்கட்டியுள்ள நிலையில்,ரஜினியின் ஹீரோயின்ஸ் வெளிச்சத்திற்கு வந்துள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நடிகர் ரஜினிகாந்தை வீட்டிற்குச் சென்றே நேரில் சந்தித்த நக்மா,அடுத்ததாக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.இரண்டு சந்திப்பிற்கும் அவர் கொடுத்த விளக்கம் 'நட்பு ரீதியிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு'.இதன் பின்னே உள்ள நிஜ நிலவரம் கொஞ்சம் பெரியதுதான் என்கிறது காங்கிரஸ் சோர்ஸ்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல் சிலவேளைகளில் எளிதாக இருக்கும்.ஆனால் பல காலங்களில் அது சிக்கலான ஒன்று என்பது அரசியல் நோக்கர்களின் அசைக்கமுடியாத கருத்து.
இந்தவகையான கோஷ்டி அரசியலுக்கு,தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும் 'எந்தக் காட்சியில்தான் இல்லை குழு அரசியல்.என்னமோ எங்க கட்சியில் மட்டும் தான் இருப்பது போல பேசுறீங்க.என்ன மற்ற கட்சியைவிட எங்க கட்சியில் கொஞ்சம் கோஷ்டிகள் அதிகம்.அவ்வளவுதான்.' என்று பேசியுள்ளார்கள்.
'காதலன்' ஹீரோயின்
'காதலன்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நக்மா அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து நம்பர் ஒன் கதாநாயகியாக,தமிழ் சினிமாவில் 1990ம் ஆண்டுகளில் வலம்வந்தார்.அது அ.தி.மு.க. ஆட்சிக் காலம் என்பதால் அரசியல் பரபரப்பிலும் நக்மா சிக்கினார்.
இதெல்லாம் கடந்து விட்ட நிலையில்,திரைப்பட வாய்ப்புகள் வராத நிலையில் அரசியல் அவதாரம் எடுத்தார் நக்மா.எனது தாத்தா காங்கிரஸ் கட்சியில் பிரமுகர்.சுதந்திர போராட்ட வீரர் என்றெல்லாம் கூறிய அவர் நேரடியாக சோனியா,ராகுல் செல்வாக்கில் தமிழகம் வந்தார். அடுத்தடுத்து அரசியல் பதவிகள் பெற்றார்.
ராகுல் கொடுத்த ஐடியா
தற்போது மகிளா காங்கிரசின் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் நக்மா,ஜெயலலிதா இல்லாத அரசியல் சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கணக்கிட்டுள்ளார்.அதே போல திமுக தலைவர் கருணாநிதியின் சைலன்ட் மோடையும்,பாஜகவின் ஓட்டு வங்கியில்லாத நிலையையும் நக்மா புரிந்து வைத்துள்ளார். இதையெல்லாம் கவனித்த ராகுல் பச்சைக்கொடி காட்ட,நேரடியாக களத்தில் குதித்துவிட்டார் நக்மா.
ரஜினிக்கு நக்மா தூண்டில்
தனது நீண்ட கால நண்பர் ரஜினி என்று நக்மா கூறினாலும்,இவ்ளோ நாள் இல்லாமல் ஏன் இப்போது மீடியாக்களை அழைத்துக்கொண்டு ரஜினியை பார்க்க வேண்டும் என்று இப்போது கேள்விகள் எழுந்துள்ளன. மோடியின் நண்பர் ரஜினி.இருவரும் துக்ளக் 'சோ'வுக்கு மிக நெருங்கிய நண்பர்கள். இதெல்லாம் காங்கிரஸ் தலைமைக்கும் நன்கு தெரியும்.அதனால் நக்மா மூலம் தூண்டில் போட்டுள்ளார் ராகுல்.
மயங்குவாரா ரஜினி என்பது அவரின் 2.0 பட ரிலீசுக்கு பிறகு தெரிந்துவிடும்.ஏன் எனில் ரஜினிக்கு அரசியலை விட சினிமாதான் முக்கியம்.அதான் உள் ரகசியம் அவருக்கும் ஜி.கே.மூப்பனாருக்கும் கருணாநிதிக்கும் மட்டும்தான் தெரியும்.
நக்மாவின் பின்னே காங்கிரஸ்
கொஞ்ச மாதங்களுக்கு முன்பு பின்னாடி குஷ்பு பின்னாடி காங்கிரஸ் இருந்தது.இப்போது நக்மா பின்னாடி இருக்கிறது.இது மிகுந்த வேதனையான ஒன்று என்கிறார்கள் கதர் சொந்தங்கள்.நடிகையாக ஜொலித்தவர்கள் கையில் காங்கிரஸ் இருக்கிறது என்றால், வெள்ளைக்காரனிடம் அடி,உதை,மிதிபட்டு,சிறையில் சித்ரவதைக்கு உள்ளான விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று அவர்கள் கொதிக்கவும் செய்கிறார்கள்.
இதெல்லாம் கொஞ்ச நாள் தான்.அப்புறம் தானாக டெல்லிக்கு உண்மை புரியும்.இவங்க பின்னாடி போவதை எல்லோரும் நிறுத்துவாங்க என்றும் கதர் சொந்தங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றன.
குஷ்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து தமிழக அரசியலுக்கு வந்தவர் குஷ்பு. ஜெயா டிவியில் விதவிதமான ஜாக்கெட் போட்டுக்கொண்டு ஜாக் பாட் நிகழ்ச்சி நடத்தினார்.அதன் காரணமாக தனக்கும் அதிமுகவில் பெரிய பொறுப்பை தருவார் ஜெயலலிதா என்று காத்திருந்தார்.அதற்கு டிடிவி தரப்பில் இருந்தும் சப்போர்ட் கிடைத்தது.அது தெரிந்த ஜெயலலிதா,குஷ்புவை சந்திக்கவே அனுமதி மறுத்தார்.
இந்த வெறுப்பில் திமுக தலைவரோடு நெருங்கிய குஷ்பு அங்கு முன்வரிசைத் தலைவரானார். இதை விரும்பாத ஸ்டாலின் வெறுப்புக்காட்ட குஷ்பு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்.இதையெல்லாம் மறக்காத குஷ்பு ,ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் கொடுத்த அங்கீகாரம் அவ்வளவு எளிதாக தனக்கு கிடைத்துவிடாது என்று உணர்ந்துள்ளார். அதனால் நக்மாவைப்போல சுழன்று அடிக்காமல் அமைதி காத்து வருகிறார் என்கிறார்கள் சத்திய மூர்த்தி பவனில்.