டெல்லியில் விவசாயிகள் நிர்வாண போராட்டத்தை தொடங்கி வைத்ததே கன்னடராம்- கொச்சைப்படுத்தும் பொன்.ராதா!
டெல்லியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவர்தான் விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்தை தொடங்கி வைத்ததாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார்.
நாகர்கோவில்: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டத்தை படுகேவலமாக கொச்சைபடுத்தியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். நிர்வாணப் போராட்டத்தை கன்னடர் ஒருவரே தொடங்கி வைத்ததாக கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகம் அருகே விவசாயிகள் நிர்வாண போராட்டத்தை நடத்தினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
5 முறை சந்தித்தேன்
இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நான் 5 முறை அவர்களை சந்தித்தேன்.
அமைச்சர்களுடன் சந்திப்பு
அப்போது விவசாயிகள் நலனுக்காக அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று உறுதி அளித்தேன். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, மத்திய விவசாயத்துறை அமைச்சரை 2 முறையும், நிதி அமைச்சரை 3 முறையும் சந்தித்து இருக்கிறார்.
நிர்வாண போராட்டம்
இந்த போராட்டத்தை அவர்கள் ஏன் தமிழகத்தில் நடத்தவில்லை? பிரதமர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும்போது விவசாயி ஒருவர் நிர்வாணமாக போராட்டம் நடத்தி இருக்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர்
முதலில் நிர்வாணமாக நின்றவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அதன் பின்னணி என்பது பற்றி தெரிய வேண்டும். மேலும் இந்த நிர்வாண போராட்டத்தை அய்யாக்கண்ணு ஏன் தடுக்கவில்லை?
மாநில அரசின் கடமை
உத்தரபிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதில் மத்திய அரசின் நிதி எதுவும் இல்லை. அதுபோல தமிழக அரசு ஏன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை. அதுகுறித்து யாரும் குறை கூறுவதில்லை.
100 போராட்டங்கள்...
டெல்லியில் ஒரு நாளைக்கு 100 போராட்டங்கள் நடைபெறும். அப்படி போராட்டம் நடத்துவோரையெல்லாம் பிரதமரால் சந்திக்க முடியுமா? விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டு வந்தால் பிரதமரை சந்திக்கலாம் என்றேன். கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரதமரே சொன்னாலும் டெல்லியில் இருந்து போக மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.