கேரள வெள்ளத்துக்கு இதுதான் காரணமா?... அப்ப குஜராத் பூகம்பத்துக்கு??... பொங்கி எழுந்த ஜோதிமணி!
Recommended Video
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம் என்று சிலர் கூறியதால் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி கடுங்கோபமடைந்தார்.
கேரளத்தில் 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதமாக அங்கு மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து 14 மாவட்டங்களும் வெள்ளகாடாகவே காட்சியளிக்கிறது.
அங்குள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இது மட்டுமல்லாமல் நிலச்சரிவும் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்ணில் புதையுண்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்
இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தெய்வ வழிப்பாட்டில் ஆண்-பெண் பாரபட்சம் காட்டக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறுகிறது.
கேரள பெருவெள்ளம்
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு மீறப்படுவதை ஏற்க முடியாது என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கூறுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சபரிமலை கோயிலுக்கு பெண்கள் நுழைய முயற்சிப்பதே கேரள பெருவெள்ளத்துக்கு காரணம் என்று சிலர் கூறியுள்ளனர்.
|
டுவிட்டரில் ஜோதிமணி
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கேரளம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மக்கள் இறக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி இன்னும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
குஜராத் பூகம்பத்துக்கு என்ன காரணம்
இந்த சமயத்தில் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயற்சிப்பதே பெரு வெள்ளத்துக்கு காரணம் என்று தலைசிறந்த விஞ்ஞானிகள் சிலர் கூறி வருகின்றனர். என்னே மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அப்படியென்றால் குஜராத் பூகம்பம் மற்றும் உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என்பதை அந்த மேதாவிகள் கூறுவார்களா என்று ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.