கந்துவட்டி தீக்குளிப்பு.... விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்: நெல்லை எஸ்.பி.
கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 3 பேர் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.
நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இறந்த தம்பதி கடன் வாங்கி நிலம் வாங்கியுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று தன் மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் ஆருண்யா, அட்சயா ஆகியோருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளித்தார். இதில், இசக்கிமுத்து தவிர மற்ற மூவரும் மரணமடைந்தனர்.
இவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீஸாரிடம் சென்றுள்ளனர். காவல்துறையினரும் கடன் கொடுத்தவருகளுக்கே ஆதரவாக செயல்பட்டனராம்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் 6 முறை மனு கொடுத்தும் பயனில்லை என்பதால் மனமுடைந்த அந்த தம்பதியினர் நேற்று தீக்குளித்தனர். இதில் இசக்கி முத்து மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மூவரும் இறந்துவிட்டனர்.
தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி முத்துவுக்கு கடன் கொடுத்து கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாக முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மாமனார் காளிராஜ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கந்து வட்டி புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ்நநிலையில் இந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இசக்கி முத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோரிடம் கடன் வாங்கி நிலம் வாங்கியுள்ளார். குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு ரூ.60 ஆயிரம் கடன் வாங்கினாராம். வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
பலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தை மற்றவர்களுக்கு வட்டிக்கு விட்டுள்ளார் இசக்கிமுத்து. பலரிடம் நகை வாங்கி அதை அடகு வைத்து சுப்புலட்சுமி கடன் பெற்றுள்ளார். கடந்த 9ஆம் தேதி நேரில் ஆஜராக சுப்புலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆள் இல்லை என இன்ஸ்பெக்டருக்கு சம்மன் திரும்பி வந்தது.
விசாரணைக்கு இசக்கி முத்து ஆஜராகவில்லை. இந்த வழக்கில் சாட்சிகளை திரட்ட போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புகார் மனுக்களை பெறுவதில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையில் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு விசாரணையும் முடிந்தபிறகே எதையும் ஆதாரப்பூர்வமாக வெளியிட முடியும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்சனை உள்ள இடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வருவாய் துறையும், காவல்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. முழு விசாரணை முடிந்த பிறகே, ஆதாரத்தை அறிக்கையாக வெளியிடுவோம். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.