சட்டென்று மாறுகிறதா தமிழக அரசியல் வானிலை?
தமிழக அரசியல் நிலவரம் மாறிக் கொண்டே இருக்கிறது.
சென்னை: திமுக-காங்கிரஸ் இடையே புகைச்சல் அதிகமாகி கொண்டே வருகிறது.
பாஜக-திமுக கூட்டணி என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறிவந்தன. இது கருணாநிதி இறந்ததிலிருந்தே இந்த பேச்சு அதிகமாக எழுந்தது. நினைவேந்தல் நிகழ்ச்சிவரை இரு தரப்பினருக்கும் உறவு நல்லாதான் போய்ட்டு இருந்தது. அப்போதுதான் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விவகாரம் எழ ஆரம்பித்தது.
அமித்ஷா கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு வரவில்லை என்று அறிவித்ததுமே நிலைமை மாற தொடங்கியது. காவிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஸ்டாலின் பேசியதுமே பாஜக-திமுக உறவு இல்லை என்பது தெளிவாகிவிட்டது என்றும் அதோடு சோபியா விவகாரம் வந்துவிடவும் எலியும் பூனையுமாக ஆகிவிட்டனர் என்றும் கூறப்பட்டது.
தொடங்கியது லடாய்
இப்படி பாஜகவுடன் திமுக முட்டி மோதிக் கொண்டிருப்பதை பார்த்த காங்கிரஸ் தரப்பினர் ரொம்பவே சந்தோஷப்பட்டனர். அவர்கள் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் இருந்தது. ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டவே தொடங்கினர். இதனால் திமுகவுடன் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதிலேயும் இப்போது லடாய் ஆரம்பித்துவிட்டது.
கராத்தே தியாகராஜன்
பெட்ரோல்-டீசல் விலையை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த பந்த்தில்தான் இவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. கராத்தே தியாகராஜன், "தி.மு.க சார்பில் எந்த பெரிய தலைவர்களையும் ஸ்டாலின் அனுப்பி வைக்கவில்லை. இதுவே திமுக இப்படி பந்த் நடத்தியிருந்தால் நாங்கள் போகாமல் இருந்திருப்போமா? காங்கிரஸை ஸ்டாலின் அவமதித்துவிட்டார்" என்று மேடையிலேயே தன் குறையையும் ஆதங்கத்தையும் போட்டு உடைத்தார். இதனை கேட்ட கூட்டத்திலிந்த திமுக தொண்டர்களிடையே சலசலப்பும் ஏற்பட்டு, ஒருசிலர் மேடையிலிருந்த கராத்தே தியாகராஜனை நோக்கி ஓடிவந்தார்கள்.
என்ன அதிருப்தியோ?
இப்படி பொது இடத்தில் ஸ்டாலினை தாக்கி பேசிய விவகாரம் பெட்ரோல் இல்லாமலேயே அறிவாலயம் வரை கொழுந்துவிட்டு எரிந்தது. ஏற்கனவே ஈவிகேஎஸ் தரப்பில் உள்கட்சி பூசல் வேறு நீடித்து வருகிறது. இதில் தமிழக காங்கிரஸ் தலைமை மீது திமுகவுக்கு என்ன அதிருப்தியோ தெரியவில்லை. ஒருவேளை தலைமை மாறினால்தான் கூட்டணி பேச்சுக்கு வருமா என்று அதுவும் தெரியவில்லை.
யோகேந்திர யாதவ்
சமீபத்தில் யோகேந்திர யாதவ் செய்தியாளர் சந்திப்பில், "சட்டம் இல்லாத ஒரு செயல் அறமற்றது. அந்த அறமற்ற செயலை நாங்கள் செய்யமாட்டோம். என்னை கைது செய்வீர்களா? எத்தனை நாள் என்னை உள்ளே வைக்க முடியும்? என்று தைரியமாக கேட்டிருந்தார். ஒரு அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்தான் யோகேந்திரயாதவ். இவரைப்போல் யாருக்கும் பயப்படாமல் தன் கருத்தை சொல்லும் துணிவு வேண்டும். ஆனால் தமிழகத்தில் யாருக்குமே இந்த துணிச்சல் இல்லை என்பதுதான் உண்மை.
மிரட்டி பார்க்கிறதா திமுக?
ஏனென்றால் காவியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டார். அந்த வார்த்தை பேச்சோடு இருந்தால் போதுமா? அப்படி உண்மையிலேயே பாஜகவை எதிர்க்கும் எண்ணம் இருந்தால், அந்த பந்த்திற்கு திமுக தன் முழுஆதரவை தெரிவித்திக்க வேண்டும்தானே? கராத்தே தியாகராஜன் கேட்பதும் இந்த விஷயத்தில் நியாயம்தானே? ஒருவேளை காங்கிரஸை மிரட்டி பார்க்க இப்படி ஸ்டாலின் நடந்து கொள்கிறாரா? என்றும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
காதில் வாங்கவில்லை
இதற்கு நடுவில் டிடிவி தினகரனையும் காங்கிரசில் இணைக்க முயற்சி நடந்து வருகிறது. அதற்கு தினகரனோ, காங்கிரஸ்-திமுக கூட்டணி திட்டவட்டமாக இல்லை என தெரிந்தால் தான் இணைய தயார் என்று சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சொல்லப்பட்டதாம். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் வரை மாநில தலைமையில் எந்த மாற்றமும் கிடையாது என்று இந்த விவகாரங்களை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
திருமா, திருநாவுக்கரசர்
ஆனால் எப்படி பார்த்தாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் இனி சுமூகமாக இருக்குமா என தெரியவில்லை. இப்படி திமுக, அதிமுக என பெரிய கட்சிகளுடன் உறவை முறித்து கொண்டால் தேசிய அளவில் பெரும் பின்னடைவு நமக்கு ஏற்பட்டுவிடுமே என தமிழக காங்கிரஸ் தரப்பு நினைக்கிறது. அதற்காக ரஜினியுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி கராத்தே தியாகராஜனே ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், "ரஜினியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சந்தித்து பேசினார். அதேபோல திருநாவுக்கரசரும் சந்தித்து பேசினார்" என்று கூறியுள்ளார்.
பாஜக-ரஜினி
இந்த பேச்சு மிகவும் உற்று கவனிப்பதாகவே உள்ளது. ஏற்கனவே மதவாத சக்திகளோடு கூட்டணி இல்லை என்று திருமா உறுதியாக சொல்லிவிட்டார். அப்படி இருக்கும்போது, ரஜினியை அவர் எதற்காக சந்திக்க வேண்டும்? அதேபோலதான் திருநாவுக்கரசரும். இருவருமே பாஜகவுக்கு எதிரானவர்களாக இருந்தும் ஏன் ரஜினியை சந்தித்து விட்டு வந்தார்கள்? ஒருவேளை ரஜினி பாஜககூடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்துவிட்டாரா?
கமுக்கமான பேர்வழி
ரஜினியையும் பாஜகவையும் பிரிக்க முடியாத என்ற பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் தேசிய அளவைவிட தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலை அதிகமாகவே இருப்பதை ரஜினி இப்போது உணர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால், மதவாதத்தை எதிர்ப்பவர்களை சந்தித்து பேசியிருக்க மாட்டார். அதனால் பாஜகவுடன் ரஜினி கூட்டணி என்பதற்கான சாத்தியக்கூறு குறைவாகத்தான் இருக்கிறது என்று கருதத் தோன்றுகிறது. ஆனால் ரஜினி ஒரு கமுக்கமான பேர்வழி. அவரை எப்போதுமே நம்ப முடியாது என்பதே நாம் கண்ட அனுபவம்.
இப்படி ஒரு அரசியல் முகாமிலும் சூழல்கள் மாறி மாறி வருவதைப் பார்க்கும்போது, சட்டென்று மாறுகிறதா அரசியல் வானிலை? என்றுதான் கேட்க தோன்றுகிறது.