இதுக்காகத்தான் எம்ஜிஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் ஐடி ரெய்டு!
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமி மருத்துவ கல்லூரிகளில் பலகோடி ரூபாய் ஊழலில் ஈடுப்பட்டதற்கான ஆவணங்களை ஐடி துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை: எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமி மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அடிப்படையில்தான் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மருத்துவக் கல்லூரி தொடர்பாக பல மோசடிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீதாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை மளமளவென அடைந்தார். அவர் முதலில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.
அடுத்தடுத்து பதவி உயர்வு
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இந்திய மருத்துவக் கல்வி இயக்குநராக கீதாலட்சுமி நியமிக்கப்பட்டார். அவரை மூத்தவர்கள் பலர் இருக்க இவருக்கு எப்படி இந்த உயர் பதவி கிடைத்தது என்று பலரும் புருவத்தை உயர்த்தினார்கள்.
துணைவேந்தர் பதவி
இந்திய மருத்துவக் கல்வி இயக்குநருக்கான பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் உடனடியாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கீதாலட்சமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். இப்படி அதிமுக ஆட்சியில் அடுத்தடுத்த பதவி யோகங்கள் கீதாலட்சுமிக்கு அடித்துக் கொண்டே இருந்தது.
பலகோடி ஊழல்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கீதாலட்சுமி மிகவும் வேண்டப்பட்டவராகக் கூறப்படுகிறது. அதனால்தான் அவருக்கு பதவிகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்றும் அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. அமைச்சரின் சப்போர்ட் தனக்கு இருப்பதால் கீதாலட்சுமியும் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
யார் யார் சிக்குவார்கள்?
இன்று வருமானவரித் துறையினர் நடத்திக் கொண்டிருக்கும் சோதனையில் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையின் முடிவில் கீதாலட்சுமி மட்டுமல்லாமல் சுகாதாரத் துறையில் இருக்கக் கூடிய மற்ற அதிகாரிகளும் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உறவினர் வீடுகளில் ரெய்டு
கீதாலட்சுமிக்கு சொந்தமான மற்றொரு வீடு போரூரில் இருப்பதால் அங்கும் ரெய்டு நடந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.