விஜயகாந்த்துக்கு என்னாச்சு.. பழைய பன்னீர் செல்வமா சீக்கிரம் திரும்பி வாங்க "கேப்டன்"!
தேமுதிக மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: கணீர் கணீரென்ற அரசியல் தெறிக்கும் வசனங்களை ஒலித்தவர் விஜயகாந்த். எத்தனையோ ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள் கணக்கிலடங்காதது.
தனிப்பட்ட முறையில் ஆகட்டும், திரைத்துறையில் ஆகட்டும் விஜயகாந்த், மக்கள் மீது காட்டிய அக்கறையும் பாசமும் மகத்துவம் மிக்கது. அது இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எவ்வளவோ அவமானங்கள், தோல்விகளுக்கு பின்தான் அவர் உச்சம் தொட்டார். அரசியல் நெடி வசனங்களை பேசி அதிரடி ஹீரோ, அசைக்க முடியாத ஹீரோ என்று உயர்ந்தார். அதேபோல அரசியலிலும் கலக்கல் தலைவராக உள்புகுந்து விஸ்வரூபமெடுத்தார்.
எதிரிகளை பந்தாடினார்
ஆனால் நாளடைவில் அவரது உடல் பலவீனப்பட்டது. பலவித சிகிச்சைகள் எடுத்து கொண்டார். பழைய உற்சாகம் குறைந்து, செயல்பாடும் சிறுத்து போனது. காலை சுழட்டி சுழட்டி எதிரிகளை பந்தாடிய விஜயகாந்த்தை, அரசியல் வசனம் பேசி மக்களிடம் கைதட்டு வாங்கிய விஜயகாந்த்தை பார்த்த மக்கள், நாளடைவில் அவரது உடல்நலம் கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார்கள். அரசியலில் ஈடுபாடு குறைந்தது. கட்சி பலவீனப்பட்டது. நிர்வாகிகள் சிதறி போனார்கள். உள்கட்சி பூசலும் விரிவடைந்தது.
அமெரிக்காவில் விஜயகாந்த்
தன் கட்சியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் சிகிச்சைக்காக குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், பின்னர் அமெரிக்காவும் சென்றார். அங்கு சந்தோஷமாக இருப்பதாககூறி தன் குடும்பத்தாருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டார். இது தேமுதிக தொண்டர்களுக்கு ஒரு குஷியை கொடுத்தது.
விஜி... விஜி...
இதனை தொடர்ந்து கருணாநிதி உடல்நலிவுற்றபோது, விஜயகாந்த்தின் பேச்சு அனைவரையுமே கலங்க செய்தது. கருணாநிதி இறந்த அன்று விஜயகாந்த் அழுததில் வியப்பில்லை. தனக்கு திருமணம் செய்து வைத்தவரும், விஜி விஜி... என்று பாசத்தோடும் அழைத்தவரின் மரணம் அவரை உலுக்கி எடுத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
மாநாடு ஒத்திவைப்பு?
இந்நிலையில், விஜயகாந்த்திற்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாலும், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதாலும் அவர் மேலும் சில வாரங்கள் அமெரிக்காவிலேயே தங்கி இருப்பார் என தகவல்கள் கூறுகின்றன. இதற்காக சுதீஷ் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்த் சிகிச்சை மேலும் தொடர உள்ளதால், வருகிற செப்டம்பர் 16-ம் தேதி திருப்பூரில் தேமுதிக சார்பில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீக்கிரம் வாங்க கேப்டன்
எப்போது மீண்டும் கூடும் என்று கூட இன்னும் அறிவிக்கப்படாமல், மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முழு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி, விரைவில் பழைய விஜயகாந்த்தாக வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும். "கெட் வெல் சூன் கேப்டன்!"