ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்புவதிலே குறியாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி!
ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குதான் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
ஒருகட்டத்தில் இந்த வழக்கை கையிலெடுத்த திமுக அதில் தன்னை இணைத்துக் கொள்ள இப்போது திமுக தலைவர் கருணாநிதி தொடுத்த வழக்குதான் என்று நிலை கொண்டுவிட்டது.
அண்மையில் கூட சுப்பிரமணியன் சுவாமி மீது அடுத்தடுத்த அவதூறு வழக்குகளை ஜெயலலிதா தொடர்ந்தார். அசராத சுப்பிரமணியன் சுவாமியோ, ஜெயலலிதா ஜெயிலுக்குப் போவது உறுதி என்று ட்விட்டரில் கொந்தளித்தார்.
அத்துடன் ஜெயலலிதாவின் ஆட்சியை குரங்கு கையில் கொடுத்த பூமாலை, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்றெல்லாம் சகட்டு மேனிக்கு சாடியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இதனால்தான் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்த உடனேயே அதிமுக தொண்டர்களின் கோபம் சுப்பிரமணியன் சுவாமி மீதும் திரும்பியது. ஆனால் அலட்டிக் கொள்ளாத சுப்பிரமணியன் சுவாமி, திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிந்து போய்விட்டது என்று கூறி பாஜகதான் இனி தமிழகத்தில் எல்லாமும் என்று ஆரூடம் கூறத் தொடங்கியிருக்கிறார்..