ஒரு கவர்னரோட மனசு இன்னொரு கவர்னருக்குத்தான் தெரியும்.. ரோசய்யா சொல்வதைப் பாருங்க!
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, தற்போதைய ஆளுநர் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: தமிழக அரசியல் நிலவரத்தையும் கூடவே சட்ட நுனுக்கங்களையும் கருத்தில் கொண்டே ஆளுநர் எந்த முடிவையும் எடுக்க முடியும். இல்லாவிட்டால் விமர்சனங்கள் எழும் என்று தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுநராக இருந்தவர் ரோசய்யா. தற்போதைய தமிழக நிலவரம் குறித்து அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆளுநராக அவர் இருந்தவர் என்பதால் ஒரு ஆளுநர் இப்படிப்பட்ட சூழலில் எப்படி செயல்பட முடியும் என்பதை அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் கூறுகையில், தமிழக அரசியலில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் முன்பு இரு விஷயங்கள்தான் உள்ளன.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கொடுத்துள்ளார். அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டு விட்டார். எனவே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறும் சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க அழைக்கலாம். இல்லாவிட்டால், முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம். இதைதத்தான் அவர் செய்ய முடியும்.
அதேசமயம், முடிவு எடுப்பதற்கு முன்பு சட்ட நிபுணர்களிடம் அவர் ஆலோசனை பெற விரும்புவதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் மத்திய அரசின் ஆலோசனையை பொறுத்தே ஆளுநரின் முடிவு இருக்கும் என்றும் தெரிகிறது. தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் விமர்சனங்கள் எழும், தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார் ரோசய்யா.