அன்று ரஜினி வருத்தம் தெரிவித்தபோது சத்யராஜ் சொன்ன பதில் என்ன தெரியுமா?
பாகுபலி 2 படம் கர்நாடகத்தில் பிரச்சினையின்றி ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, கன்னட அமைப்புகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார் சத்யராஜ். அதையொட்டி, ஆதரவு எதிர்ப்புக் கருத்துகள் ஏகத்துக்கும் குவிந்து வருகின்றன.
அவை ஒரு பக்கமிருக்கட்டும்... 2008-ம் ஆண்டு குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக முடியாத சூழல். இத்தனைக்கும் ரஜினி தமிழர்களுக்காக, தமிழ் விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆவேசமாகப் பேசப் போய், சிக்கலுக்குள்ளானார். ஆனால் அன்று எந்த தமிழ் நடிகரும், தலைவரும் ரஜினியின் பிரச்சினைக்கு உதவ முன்வரவில்லை.
தனி ஒரு மனிதராக தன் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டார் ரஜினி. ஆனால் அதை, ரஜினி தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் என்று உல்டாவாகப் பேசி, பப்ளிசிட்டி பார்த்தனர் அன்றை நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார் உள்ளிட்டோர்.
அன்று சத்யராஜ் சொன்னதுதான் ஹைலைட்.
"ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.
என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்.."
- இதுதான் அவர் சொன்னது.
அன்று சொன்னதை இன்று செய்து தமிழர் மானத்தையும் உங்கள் தன்மானத்தையும் நிரூபித்திருக்கலாமே சத்யராஜ்?