9 ஆண்டுகளுக்கு முன்னர் சத்யராஜ் பேசியது இதுதாங்க.. இதுக்குதான் இப்போ கர்நாடகத்தில் களேபரம்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது சத்யராஜ் பேசியது இதுதாங்க..
சென்னை: ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் கன்னட அமைப்பினர் கொந்தளிக்கும் வகையில் அப்படி என்னதான் பேசிவிட்டார் சத்யராஜ். இதுதாங்க அது..
காவிரி பிரச்சனை தொடர்பாக திரைத்துறை நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றப் போராட்டத்தில் ரஜினியும் கமலும் மேடையில் அமர்ந்திருக்க சத்யராஜ் பேசியது:
நடிகர் பெயரை சொன்னால் கைத்தட்டல் வாங்குவதற்கு பதில் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாவேன். இங்கு நான் வந்தது வித்தைக் காட்ட அல்ல. கர்நாடகத்தில் தமிழனை கன்னடன் அடிக்கிறான். அதுக்கு கண்டனம் தெரிவிக்க வந்திருக்கோம்.
மனிதன் அல்ல
பொதுவாக நான் என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைபடுவேன். ஆனால் இன்றைய தினத்தில் இருந்து நான் மனுஷன் இல்லை; தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இப்போது உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லையா என்று.
தமிழன் மரம்
அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். தமிழன் மனிதன் இல்லை; மரம் என்றுதான் அவர்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழனைத் தாக்கும் போது தமிழர்கள் அத்தனை பேரும் சேர்ந்து அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
தண்ணீரே வராது
எங்கிருந்தும் தமிழர்களுக்கு தண்ணீர் விடக் கூடாது என்று சொல்கிறார்கள். காவிரியில் இருந்தும் வரக்கூடாது. கிருஷ்ணாவில் இருந்தும் வரக் கூடாது. முல்லைப் பெரியாறில் இருந்தும் வரக் கூடாது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவும் கூடாது என்கிறார்கள்.
பிரிவினை
அந்தத் திட்டத்தினால் தமிழர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதால் நிறைவேற்றக் கூடாது என்கிறார்கள். எனக்கு மனிதனாக வாழ வேண்டும் என்றுதான் ஆசை. தமிழன் என்று சொல்லிவிட்டு பிரிவினை பேச எனக்கு ஆசை இல்லை. ஆனால், பிரிவினையை பேச வேண்டிய சூழலை நீங்கள்தான் உருவாக்கியுள்ளீர்கள் என்று சத்யராஜ் ஆக்ரோஷமாக பேசினார்.