சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழா... முதல்வர் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா?
சிவாஜி கணேசனின் மணிமண்டபத் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை சிவாஜியின் ரசிகர்கள் யூகித்துள்ளனர்.
சென்னை: சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளாததற்கு காரணம் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர முடியாமல் போய் விடுமோ என்ற பயம்தான் என்கின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, அடையாறில் 2120 சதுர அடியிலான அரசு நிலத்தை ஒதுக்கி, அதில் ரூ.2.80 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்டார்.
அப்பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட மணி மண்டபப் பணிகள் இந்த ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் மணி மண்டபத்தை எப்போது திறப்பது என்பது குறித்து தமிழக அரசு அறிவிக்காமலேயே இருந்தது.
அமைச்சர்கள் பங்கேற்பு
இந்நிலையில் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் அக்.1-ஆம் தேதி திறக்கப்படும் என்றும், அந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு திறப்பார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
நடிகர் சங்கம் அதிருப்தி
சினிமா துறையில் மிகவும் கொடி கட்டிப் பறந்த, மிகச் சிறந்த நடிகரான சிவாஜியின் சிலைத் திறப்பு விழாவுக்கு முதல்வரும், துணை முதல்வரும் வராதது சிவாஜியின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜெ.பங்கேற்றிருப்பார்
ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு அவரே திறந்து வைத்திருப்பார். தமிழக அரசின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் நடிகர் விஷாலும் கண்டனம் தெரிவித்திருந்தார். பல்வேறு கண்டனக் கணைகள் தொடுத்ததால் மணி மண்டபத் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
ஏராளமான நிகழ்ச்சிகள்
சேலத்தில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தொடர்ந்து ஏற்கெனவே முதல்வர் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளதால் சிவாஜிக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் இருக்கும் நிலையில் சிவாஜி மணி மண்டபத் திறப்பு விழாவை முதல்வர் கலந்து கொள்ளும் வகையில் வேறு தேதியில் மாற்றி வைத்திருக்கலாமே என்கின்றனர் ரசிகர்கள்.
இதுதான் காரணமா?
இத்தனை அழுத்தங்களுக்கு பிறகும் முதல்வர் எடப்பாடி இந்த விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து சிவாஜி ரசிகர்கள் யூகித்துள்ளனர். அதாவது உயர் நீதிமன்ற உத்தரவால் மெரினாவில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜியின் சிலையையும் மணி மண்டபத்தில் திறக்கப்பட உள்ளது. மெரினா காமராஜர் சாலையில் முதல் முதலாக அந்த சிலையை திறந்து வைத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி அதன் பின்னர் ஆட்சிக்கு வரவே இல்லை.
எடப்பாடியின் சென்டிமென்ட்
ஏற்கெனவே ஆட்டம் கண்டு வரும் தமது முதல்வர் காலி, சிவாஜி சிலையை திறந்து வைப்பதால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பயம்தான் காரணம் என்று ரசிகர்களும், அரசியல் பார்வையாளர்களும் கருதுகின்றனர்.