போலீஸ் கண்ணில் மண்னை தூவி விஎச்பி ரத யாத்திரையை தடுக்க சீமான் முயற்சி - கைது
செங்கோட்டையில் 144 தடையை மீறி நுழைந்த சீமான் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
Recommended Video
நெல்லை: செங்கோட்டையில் போலீசார் கண்ணில் மண்ணை தூவி 144 தடையை மீறி நுழைந்த சீமான் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தீந்தமிழ்நாட்டில் தீய சக்திகளுக்கு என்ன வேலை என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் போராட்டம் நடத்தின.
இதையடுத்து செங்கோட்டையில் ராமராஜ்ய ரத யாத்திரை தடுப்பு மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
முன்னெச்சரிக்கை
முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்க சென்ற மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் வேல்முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். சாலை மறியல் போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ, தமுமுக உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கண்ணில் மண்ணை தூவி
இந்நிலையில் 144 தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கோட்டை பகுதிக்கு சென்றார். தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் கண்ணில் மண்ணை தூவி சீமான் செங்கோட்டைக்கு வந்தார்.
சீமான் கைது
சீமான்விஎச்பி ரத யாத்திரையை தடுக்க சீமான் தலைமையில் ஏராளமானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். வி.எச்.பி. ரத யாத்திரையை முற்றுகையிட முயன்ற சீமானை போலீசார் கைது செய்தனர். சீமானுடன் போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தீயசக்திகளுக்கு என்ன வேலை?
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தீந்தமிழ்நாட்டில் தீய சக்திகளுக்கு என்ன வேலை? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?
அமைதிச் சோலை தமிழகத்தில் ரத்த ஆறு ஓட சதி நடப்பதாகவும் சீமான் தெரிவித்தார். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்று கேள்வி எழுப்பிய சீமான் தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர் என்றார்.