நம்ம எல்லாரையும் கற்கால போக்குவரத்துக்கே கொண்டு போகும் மத்திய, மாநில அரசுகள்... இதுவல்லவோ வளர்ச்சி!
பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இனி நாம் போக்குவரத்துக்கு கற்கால முறையைத் தான் பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
Recommended Video
சென்னை : அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு, புதிய வரலாறு படைக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலையால் இனி மக்கள் போக்குவரத்துக்கு கற்கால முறையைத் தான் பின்பற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் மக்கள் மீண்டும் பழைய போக்குவரத்து முறைக்கே தள்ளப்பட்டுள்ளனர் இதுவல்லவோ வளர்ச்சி என்று நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் சிக்கி அல்லாடுகின்றனர் மக்கள்.
மனித சமுதாய வளர்ச்சியின் அடையாளமாக முதலில் பார்க்கப்பட்டது போக்குவரத்து. கால்நடையாக பயணித்து, பின்னர் மாட்டுவண்டி, குதிரை வண்டி, சைக்கிள் ரிக்ஷா, சைக்கிள் என்று முன்னேற்றம் கண்டு படிப்படியாக பேருந்து, இரு சக்கர வாகனம், கார் என்று நாகரிக வளர்ச்சி கண்டது. நகர்ப்புறங்களைப் பொறுத்த மட்டில் போக்குவரத்துக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால் கிராமப் புறங்களில் இன்றும் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். சில கிராமங்களில் நாள் கணக்கில் அரசுப் பேருந்துக்காகவும், மினி பஸ்க்காகவும் காத்திருக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகள் தமிழகத்தில் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக மலைப்புற கிராமங்களில் வசிப்போரின் நிலை இன்னும் படு மோசம்.
வளர்ச்சிக்கான போராட்டம்
இத்தகைய சூழலில் இன்னும் வளர்ச்சிக்கான பாதையை நோக்கி போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணமானது 68 சதவீதம் முதல் 108 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது அரசு. அதுவும் பாரபட்சமின்றி தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது, தினக்கூலிகளுக்கும் மாதம் ரூ. 10 ஆயிரத்திற்குள் சம்பளம் ஈட்டுவோருக்கும் பெரும் பொருளாதார சுமையைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது.
கட்டணம் இப்படி விதித்திருக்கலாம்?
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என்று மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் கூட இந்த அளவிற்கு பாதிப்பு இருந்திருக்காது. ஏனெனில் கட்டண உயர்வுக்காக தினசரி போராட்டங்களில் இறங்கியுள்ளவர்கள் அன்றாடம் அரசுப் பேருந்தை பயன்படுத்தி நகர்ப்புறங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வந்து செல்வோர் தான்.
சங்கிலித் தொடர் விலை உயர்வு
மற்றொரு புறம் பெட்ரோல், டீசல் விலையும் விர்ரென ஏறி வருவதால் இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும் கஷ்டமான நிலையே இருக்கிறது. பேருந்து கட்டண உயர்வைத் தொடர்ந்து டீசல் விலை உயர்வால் அடுத்த கட்டண உயர்வு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தான் இருக்கும். இது மட்டுமின்றி சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களின் கட்டண உயர்வு அதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை உயர்வு என அடுத்தடுத்து சங்கிலித் தொடர் விலை உயர்வுக்குத் தான் மத்திய, மாநில அரசுகள் வழி வகுத்துள்ளன.
பழைய போக்குவரத்துக்கே மாறுவோம்
போக்குவரத்துக்கே அல்லாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் கற்கால போக்குவரத்து முறையான 'நடராஜா' சர்வீஸ், சைக்கிள், டயர் உருட்டி ஓடுவது, ஸ்கேட்டிங் என்று எந்த எரிபொருளும் பயன்படுத்தாத மனித சக்தியில் செயல்படும் போக்குவரத்து முறைக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள்.