பெட்ரோல் - டீசல் விலை பயங்கரம்.. ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
சென்னை: பயங்கரவாதத்தை விட அபாயகரமானதாக மாறி வருகிறது பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
நடுத்தர மக்களும் கீழ்தட்டு மக்களும் இனிமேல் மகிழ்ச்சியாக வாழ முடியாதோ என்ற நிலையை பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 84 ரூபாயை தாண்டி விற்பனையாகும் பெட்ரோல் மும்பை போன்ற இடங்களில் 90 ரூபாயை நெருங்கியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி குஜராத், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. சில இடங்களில் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது, சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பாரூச் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஒடிசாவில் சம்பல்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 9 மணி முதல் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் இந்தப் போராட்டம் பிரதான எதிர்கட்சியான திமுக தலைமையில் நடைபெற்று வருகிறது. திருவாரூர், கன்னியாகுமரி போன்ற ஒரு சில இடங்களை தவிர பெருமளவில் இயல்பு வாழ்கையில் பாதிப்பு இல்லை. தமிழக பேருந்துகள் கேரளாவுக்கு செல்லாமல் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று கர்நாடக தமிழக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.
பற்றி எரியும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையில் குமரி மாவட்ட மீனவர்கள் பங்கேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து இதுவரை பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிக்காத நிலையில் மவுனம் காத்து வருகிறது. அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் பிரச்சனை அல்ல என்று அதிமுக எண்ணுகிறதா என்ற கேள்வி எழும் அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் இருந்து வருவது பொது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் இன்று நடைபெறும் இந்த பந்தை ஆதரித்திருப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு பிரச்சனையில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் மாலனிடம் கேட்டபோது ஜெயலலிதாவை பொருத்தமட்டில் கடந்த காலத்தில் இதுபோன்றதொரு நிலைமை ஏற்பட்டபோது மாநில அரசின் வரிகளை குறைத்தார். அவருக்கு வீதியில் இறங்கி போராடுவதில் உடன்பாடு இல்லையென்றாலும் இந்த விலை உயர்வு விவகாரத்தில் பிரதமரை சந்தித்து அவருக்கு வேண்டுகோள் வைத்திருப்பார். பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் காலம் என்றால் அதிமுக எம்பிக்கள் மூலமாக அழுத்தம் கொடுத்திருப்பார் என்றார் மாலன்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் கேட்டபோது, அம்மாவின் வழியில் நின்றுதான் அதிமுக செயல்படுகிறது. இன்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுகவின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதிமுக மாபெரும் கட்சி என்பதால் ஜெயலலிதா வழியில் எங்களது எதிர்ப்பை தனியாக தெரிவிப்போம் என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா லேடியா என்று சிம்மக்குரல் எழுப்பிய ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் நிச்சயமாக எண்ணிக்கையளவில் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்திருப்பார் என்கிறார்கள் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள். அமமுக வின் முன்னனனித் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வனிடம் ஒன் இந்தியா சார்பில் கேட்டபோது, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் மக்களை வாட்டி வதைக்கும் இந்தப் பிரச்சனையை எதிர்த்து நடைபெறும் இந்த பந்தை நிச்சயம் ஆதரத்திருப்பார். மக்களை பாதிக்கும் எந்த செயலையும் அவர் ஆதரித்தது இல்லை. இந்த பந்த்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கேட்டபோது எதிர்கட்சிகள் நடத்தும் ஒரு வேலை நிறுத்தத்தில் ஆளும் கட்சி எப்படி கலந்து கொள்ளும் என்று கேள்வி எழுப்பியவர் இதற்காக தங்களது எம் பி க்கள் நாடாளுமன்றத்தில் பலமுறை வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளார். அப்படியானால் அதிமுக இதற்காக தனியாக போராடுமா என்று கேட்டதற்கு போராடித்தான் வெற்றியை பெற முடியுமா வாதாடி பெற முடியாதா என்று எதிர்கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தாலும் இந்தப் பிரச்சனையில் அவர் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார், இப்போது நடைபெறும் இந்த பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார் என்றார் பொன்னையன்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம் குறித்து சி ஐ டி யு மாநிலத்தலைவர் சவுந்தர்ராஜனிடம் கேட்டபோது தங்களது தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் ஏறத்தாழ 40 % பேர் வேலைக்கு வரமால் ஆப்சன்ட் ஆகியுள்ளனர். மதியத்திற்கு மேல் இந்த தொழிலாளர்களின் ஆப்சன்ட் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றவர், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த பந்த்-ஐ நிச்சயம் ஆதரித்திருக்க மாட்டார். ஏனெனில் போராட்டங்களை ஆதரிக்கும் மனப்பாங்கு அவருக்கு கிடையாது என்றார்.
எதிர்கட்சிகளும் பொதுமக்களும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராடி வரும் நிலையில் தமிழகத்திற்கு வந்தால் தோசை சுட்டு தருவீர்களா என்று தமிழகப் பெண்களிடம் கேட்ட பிரதமர் குறைந்தபட்சம் மனதோடு பேசும் மன்கி பாத் நிகழ்ச்சியிலாவது மக்களின் பிரச்னைக்கு தீர்வு கூறுவாரா என்பதுதான் கடைக்கோடி குடிமகனின் எதிர்பார்ப்பு. செய்வாரா பிரதமர்.