18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்.. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும்.. ஒரு விறு விறு சட்ட அலசல்!
Recommended Video
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வழக்கில் சபாநாயகரின் முடிவு சரியென்றே தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று முன்னாள் நீதியரசர் வள்ளி நாயகம் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முதல்வர் பழனிசாமியை மாற்றவேண்டும். இதுதான் தினகரன் அணியினரின் ஒற்றை அஜண்டாவாக இருந்தது. இதற்காக 18 எம்எல்ஏக்கள் இணைந்து ஆளுனரை சந்தித்து புகார் வாசிக்க, இவர்கள் அனைவரையும் தடாலடியாக தகுதி நீக்கம் செய்கிறேன் என்று அறிவித்தார் சபாநாயகர் தனபால். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட அனைவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஓராண்டு நிறைவு பெறும் இந்த சூழலில் மீண்டும் இந்த வழக்கு குறித்த பரபரப்பு தமிழக மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது, காரணம் இந்த வழக்கில் 3 வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சத்தியநாரயணன் தனது தீர்ப்பை இன்னும் சில நாட்களில் வழங்கவிருக்கிறார். அந்த தீர்ப்பு அதிமுகவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பாக கூட இருக்கலாம்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 - ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை தந்திருந்தது. இதனையடுத்தே மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டார். 3 வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டதோடு வழக்கை விரைவாக முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், மற்றும் பி எஸ் ராமன், சபாநாயகர் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதல்வர் சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன், கொறடா சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி ஆகியோரின் வாதப் பிரதிவாதங்கள் சூடு பறக்க நடந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.
இந்த நிலையில் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் தீர்ப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வள்ளி நாயகத்திடம் கேட்டோம். வழக்கின் போக்கை வைத்து பார்க்கும்போது முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியபடியே தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர். எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்று கூடியே அவர்களின் முதல்வரை தேர்வு செய்கிறார்கள். அதன் பின்னர் சட்டமன்றத்திற்கு வெளியே சென்று முதல்வரை மாற்றவேண்டும் என்று கோருவது சரியாக இருக்காது என்கிறார் வள்ளி நாயகம். இரண்டு தரப்பினரும் தங்களது வாதங்களை வலுவாக வைத்திருக்கும் நிலையில் 3- வது நீதிபதி எந்த விசயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வார் ? என்று கேட்டபோது வழக்கமாக இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கும்போது அதில் ஒரு தீர்ப்பைதான் 3 வது நீதிபதி வழங்குவார். மீண்டும் வாதங்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சத்யநாராயணன் ஏதோ காரனங்களுக்காக மீண்டும் வாதங்களை கேட்டுள்ளார் என்றவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வந்தாலும் அவர்கள் சட்டசபைக்கு செல்லும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார்கள்.
சட்டசபையில் இவர்கள் அதிமுக MLA ஆகத்தான் செயல்பட முடியும். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது கொறடா உத்தரவிடுகிறார் என்றால் அவரது உத்தரவை மீறி இவர்களால் வாக்களிக்க முடியாது அப்படியே கொறடா உத்தரவை மீறி இவர்கள் வாக்களிக்கிறார்கள் என்றால் கொறடா உத்தரவை மீறியவர்கள் ஆவார்கள் அப்படி அவர்கள் செய்யும்பட்சத்தில் அவர்களின் பதவி தானாகவே பறிபோய்விடும் என்கிறார்.
ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய இரண்டு தீர்ப்புகள் தவிர 3- வது தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பிருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர் அப்படி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார். இந்த தீர்ப்பை பொறுத்து புதுச்சேரியின் நிலைமை மாறுமா என்றதற்கு புதுச்சேரியின் நிலைமை வேறு தமிழகத்தின் நிலைமை வேறு அங்கு எம்எல்ஏ ஆக நியமிக்கப்பட்டவரை சட்டசபைக்குள் வரக்கூடாது என்று கூறுவது தவறானது அதே வேளையில் இங்கு எம்எல்ஏவின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்றார் வள்ளி நாயகம்.