சென்னையை கலக்கிய ரவுடி பினுவுக்கும் கரூருக்கும் என்ன தொடர்பு... பரபர தகவல்கள்
சென்னையை கலக்கிய ரவுடி பினுவுக்கும் கரூருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சென்னையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய ரவுடி கூட்டத் தலைவன் பினுவுக்கும் மாதவனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து தற்போது பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளத்தைச் சேர்ந்த ரவுடி பினு. இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியுள்ளார். கட்ட பஞ்சாயத்து, ஆள்கடத்தல், போதை பொருள் கடத்தல், கொலை செய்வது உள்ளிட்டவைதான் இவரது தொழில்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த தொழிலில் கொடி கட்டி பறந்து வந்த பினுவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் கேரளத்துக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.
உருவான ராதாகிருஷ்ணன்
பினு உடல்நிலை தேறி வருவதற்குள் புழல் சிறையில் இருக்கும் நாகேந்திரனின் கையாளான ராதாகிருஷ்ணன் நம்பர் 1 இடத்தை பிடித்தார். விட்டதை பிடிக்க பினு கடுமையாக போராடினார். எனினும் போலீஸ் துணையுடன் ராதாகிருஷ்ணன் அனைத்தையும் நேக்காக செய்து முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராதாகிருஷ்ணனை எப்படியாவது போட்டு தள்ள வேண்டும் என்று பினு துடித்துவந்தார்.
ஒன்று திரண்ட ரவுடி
அப்போது பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் உள்ள இடத்தில் ரவுடிகள் ஒன்று கூடி பினுவின் பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது ராதாவை கொல்ல திட்டம் போட்டுவிட்டு குடித்து கும்மாளம் போட்டனர். ரவுடிகள் ஒன்று கூடுவது குறித்து தகவலறிந்த போலீஸார் ரவுடிகள் செல்வதற்கு முன்பே மலையாம்பாக்கம் சென்று தயார் நிலையில் இருந்தனர். ரவுடிகள் நன்றாக குடித்தவுடன் அவர்கள் தப்பி செல்லாத வண்ணம் சுற்றி வளைத்தனர்.
3 பேர் தப்பியோட்டம்
அப்போது போலீஸார் 70 -க்கும் மேற்பட்ட ரவுடிகளை அள்ளி சென்றனர். அந்த சமயம் போலீஸார் "கண்ணில் மண்ணை தூவிவிட்டு" பினு, விக்கி, கனகு உள்ளிட்ட 3 பேர் மட்டும் தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர். திருவள்ளூரில் பினு உள்ளிட்டோர் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
மலையாம்பாக்கத்தில் இருந்து தப்பி சென்ற பினுவின் செல்போனை ஆராய்ந்ததில் , அதிக முறை மாதவன் என்பவரின் செல்போனில் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து பினுவின் நண்பர் மாதவனை கரூரில் போலீஸார் மடக்கி பிடித்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் வடபழனியில் சலூன் கடை வைத்திருந்தபோதிலிருந்தே தனக்கும் பினுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் சென்னையில் போலீஸால் பினுவுக்கு பிரச்சினை ஏற்பட்டால் கரூர் சென்று மாதவன் வீட்டில் தங்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பழக்கம் தற்போது இல்லை
எனினும் தற்போது அவருடன் தொடர்பு இல்லை என்று மாதவன் தெரிவித்தார். இதனால் மாதவனை போலீஸார் திருப்பி அனுப்பினர். எனினும் பினு, மாதவனை தொடர்பு கொள்ளலாம் என்பதால் மாதவன் மீது ஒரு கண்ணை போலீஸார் வைத்துள்ளனர்.