"ரூ.20 டோக்கன்" உண்மைதான்.. டிடிவி ஆதரவாளர் வாக்குமூலம்.. தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகுது?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ. 20 டோக்கன் கொடுத்தது உண்மை என்று பகிரங்கமாக டிடிவி தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் ஒப்புக் கொண்டார்.
Recommended Video
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ. 20 டோக்கன் கொடுத்ததை டிடிவி ஆதரவாளர் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறவிக்கப்பட்டது. அப்போது பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி ஆர்கே நகருக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒருங்கிணைந்த அதிமுக, திமுக, தினகரன் அணி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
திமுக, பாஜக புகார்
ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அதிமுகவினர் ரூ. 100 கோடி அளவிற்கு அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் திமுக, பாஜக ஆகிய கட்சிகள் புகார் அளித்தன.
பாஜக வேட்பாளர் புகார்
இந்நிலையில் தேர்தல் தினத்தன்று ரூ. 20 டோக்கன்களை வேட்பாளர்களுக்கு அளித்ததாகவும் ,ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா நடந்ததாகவும் பகிரங்கமாக புகார் அளித்தார். எனினும் இதை தினகரன் தரப்பினர் மறுத்தனர்.
தினகரன் மறுப்பு
இந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். அப்போது பேட்டியளித்த அவர் நாங்கள் யாருக்கும் பணமும் தரவில்லை, டோக்கனும் தரவில்லை. அதிமுகவினர்தான் பணம் கொடுத்தனர். அதனால்தான் அவர்களுக்கு அவ்வளவு வாக்காவது கிடைத்தது. இல்லாவிட்டால் டெபாசிட் காலியாகி இருக்கும் என்றார்.
ஜெ.வீடியோ
இந்நிலையில் திருச்சியில் டிடிவி தினகரன் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முசிறி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், தினகரன் ஆதரவாளருமான ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளை முறியடிக்கவே ஜெயலலிதாவின் வீடியோ வெளியிடப்பட்டது. தினகரன் சொல்லித்தான் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டார்.
மாஸ்டர் பிளான்
ஆர்கே நகரில் ரூ. 20 டோக்கன் கொடுத்தது உண்மைதான். இது முக்கிய நிர்வாகிகள் போட்ட மாஸ்டர் பிளான் என்று அவர் பகிரங்க வாக்குமூலமாக அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை என்ன
இந்த பரபரப்பான தகவல் பரவுவதை அடுத்து தினகரனின் வெற்றி செல்லுமா செல்லாதா, எம்எல்ஏவாக நீடிப்பாரா, முடியாதா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறையும், அமலாக்கத் துறையும் தீர விசாரணை நடத்தி உரிய அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தால் தினகரன் தகுதிநீக்கம் செய்வது, வெற்றியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
டோக்கன் விவகாரம்
மற்றொரு தரப்போ தினகரன் இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து தற்போது ஜாமீனில் வந்துள்ளார். எனவே ரூ. 20 டோக்கன் விவகாரமும் பத்தோடு பதினொன்றாக அமுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
விளக்கம் கேட்போம்- சிஆர்எஸ்
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ராஜசேகரனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தினகரன் தரப்பைச் சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தினகரன் விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.