சசி குடும்பப் பிடியில் 50 எம்.எல்.ஏக்கள்; 7 அமைச்சர்கள்.. என்ன நடக்கப் போகிறது?
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் டி.டி.வி.தினகரனை நுழையவிடக் கூடாது என்பதில் முதல்வர் தரப்பு உறுதியாக உள்ளது. கட்சி அலுவலகத்தைக் காக்கும் பொறுப்பையும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் வசம் ஒப்படைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுவரையில் 37 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துவிட்டுச் சென்றுள்ளனர். திவாகரன் தரப்போடு சேர்த்தால் 50 எம்.எல்.ஏக்கள் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருக்கின்றனர். இவர்களை வைத்து ஆட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் திவாகரன் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தான லட்சுமியின் இறுதிக் காரியத்தையே அ.தி.மு.கவுக்குள் நுழைவதற்கான மேடையாக மாற்றிக் கொண்டார் தினகரன். வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சி அலுவலகத்துக்குச் செல்லவும் அவர் தயாராகி வருகிறார். சசிகலா குடும்பத்தின் இந்த நடவடிக்கைகளை எடப்பாடி தரப்பினர் விரும்பவில்லை. '
ஒதுங்கிருங்களேன்
அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் எனத் தூதுவர்கள் மூலம் சொல்லி அனுப்பியும், தினகரன் தரப்பினர் அசையவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா குடும்பத்து உறவினர் ஒருவர், " நமது எம்.ஜி.ஆரும் ஜெயா டி.வியும் மட்டுமே தினகரன் பெயர் சொல்லும் ஊடகமாக இருக்கிறது. கூடவே, ஜெயலலிதாவின் சொத்துக்களையும் அவர்தான் பராமரித்து வருகிறார். கட்சியின் ஊடகமும் சொத்துக்களும் இருந்தாலும், கட்சி அலுவலகத்துக்குள் அவரால் நுழைய முடியவில்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் விரிவாகப் பேசியிருந்தார்.' திவாகரனுடன் சமரசமாகப் போனாலே அனைத்தும் சரியாகிவிடும். குடும்பத்தின் ஒற்றுமைதான் நமக்கு பலம்' எனக் கூறியிருந்தார்.
ஈக்காட்டுத்தாங்கலில் ஆலோசனை
இதன்பின்னர், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் வீட்டில் வைத்து இருவருமாகப் பேசினாலும், பொதுவெளியில் எந்த சந்திப்பையும் நிகழ்த்தவில்லை. ஒவ்வொரு நாளும் குடும்ப உறவுகளிடம் தீவிரமாக விவாதித்து வந்தார் தினகரன். 'சந்தான லட்சுமியின் மறைவுக்கு 50 எம்.எல்.ஏக்களும் 7 அமைச்சர்களும் வருவார்கள்' என உறுதியாகக் கூறியிருந்தார் திவாகரன். ஆனால், 2 அமைச்சர்கள் உள்பட 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும், ' எடப்பாடி அனுமதியோடுதான் வந்தோம்' எனக் கூறிவிட்டனர்.
ஆட்சிக்கு எதிராக சிக்கல்கள்
ஆட்சிக்கு எதிராக சிக்கல்களை உருவாக்கும் வகையில் எம்.எல்.ஏக்களிடம் பேசி வருகிறார் திவாகரன். எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லையென்றால், தி.மு.கவுடன் சேர்ந்து கவிழ்க்கவும் தயங்க மாட்டோம் என்பதை நேரிடையாகவே எடப்பாடி தரப்பிடம் கூறிவிட்டனர். நிர்வாகிகளுக்கு அழைப்பு; கட்சி அலுவலகத்தில் இருந்து விரைவில் அறிக்கை என பலவித வியூகங்களை யோசித்து வருகிறார் தினகரன்" என்றார் விரிவாக.
திமுகவுடன் கை கோர்ப்பா?
"தி.மு.க முன்னணி நிர்வாகிகளுடன் சசிகலா குடும்பத்தில் இருந்து யார் யார் பேசுகிறார்கள் என்பதை கவனித்து வருகிறது மாநில உளவுத்துறை. ராஜாத்தி அம்மாள் குடும்பத்தின் வழியாகவும் சசிகலா உறவுகளிடம் பேச்சு நடக்கிறதா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர். தி.மு.க துணையோடு ஆளும்கட்சிக்கு எதிரான வேலைகளில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் சந்திப்பு நடைபெறும் இடங்கள், உறவினர்களின் வீடுகள் என ஒரு இடம்விடாமல் கவனித்து வருகின்றனர். உளவுத்துறை அறிக்கையை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கிறார் முதல்வர்.
தினகரன் மீது தாக்குதலா?
இதையும் மீறி கட்சி அலுவலகத்துக்கு தினகரன் வந்தால், சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் போல, தினகரன் மீதும் தாக்குதல் நடக்கும். அவரைக் கைது செய்யவும் மாநில போலீஸ் தயாராக இருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில், கட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமானோர் குவிக்கப்பட உள்ளனர்" என்கின்றனர் அமைச்சர்கள் தரப்பில்.