நேரில் வந்து பார்க்கிறேன்... கருப்பையாவுக்கு ஆறுதல் தந்த "கபாலி"... என்ன நடக்கும்?
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் பழ. கருப்பையாவின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவருடன் போனில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு ஆறுதலுடன் ஆதரவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் படப்பிடிப்புக்காக மலேசியா செல்வதாகவும், வந்த பிறகு உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று அவர் கூறியதாகவும் பழ. கருப்பையாவே கூறியுள்ளார்.
கருப்பையாவை ரஜினி நேரில் சந்திக்கும்போது இந்த விவகாரத்திற்குப் புது நிறம் கொடுக்கப்படும் என்பது இப்போதே தெளிவாகி விட்டது. அதேசமயம், பழ. கருப்பையா குறித்து நடிகர் ரஜினிகாந்த் பகிரங்கமாக என்ன மாதிரியான கருத்தை தெரிவிப்பார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழ. கருப்பையாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி முதல் பல்வேறு தலைவர்களும் ஆறுதலும், ஆதரவும் தெரிவித்திருந்தாலும் கூட ரஜினியின் ஆதரவும், ஆறுதலும் ஒரு வகையான புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளளது என்பதே உண்மை.
பழ. கருப்பையா
அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வந்தவர் பழ. கருப்பையா. நல்ல பேச்சாளரான இவர் அதிமுககாரர் என்றால் அவரே கூட நம்ப மாட்டார். அப்படித்தான் அவரை கட்சியில் வைத்திருந்தனர்.
அதிரடிப் பேச்சு
சமீபத்தில் துக்ளக் விழாவில் பழ. கருப்பையா பேசுகையில் அமைச்சர்கள் குறித்தும் ஆட்சியாளர்கள் குறித்தும் காட்டமாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது அதிமுக தலைமையை கோபப்படுத்தி விட்டது
வீடு மீது தாக்குதல்
இதையடுத்து பழ. கருப்பையா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவரது வீடும் அதிரடியாகத் தாக்கப்பட்டது. இதையடுத்து கருப்பையாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.
ரஜினியின் ஆறுதல்
இந்த நிலையில் அரசியல் கட்சிகளால் எப்போதும் நிரந்தரமாக வலை விரித்து வைக்கப்பட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பழ. கருப்பையாவை போனில் தொடர்பு கொண்டு பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது
ரஜினி பேசியது குறித்து கருப்பையா கூறுகையில், என்ன நடந்தது, என்ன பிரச்சினை என்று ரஜினி கேட்டார். நானும் நடந்ததைச் சொன்னேன். அவர் எனக்கு ஆறுதல் கூறினார், ஆதரவும் தெரிவித்தார்.
மலேசியா போய் வந்த பிறகு
தற்போது படப்பிடிப்புக்காக மலேசியா செல்வதாகவும், போய் திரும்பியதும் கண்டிப்பாக உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்றும் கூறினார் என்று கூறியுள்ளார் பழ. கருப்பையா.
என்ன நடக்கும்?
ரஜினி - கருப்பையா சந்திப்பால் தமிழக அரசியல் களத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படுமா என்று தெரியவில்லை. ஆனால் அது சில தாக்கங்களை ஏற்படுத்தலாமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிப்ரவரி 20ம் தேதி திரும்புகிறார்
பிப்ரவரி 20ம் தேதி ரஜினி கபாலி பட ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார். அன்றே அவர் கருப்பையாவை சந்திக்கவுள்ளதாக கருப்பையாவே கூறியுள்ளார்.
"கபாலி"யால் கருப்பையாவுக்கு என்ன லாபம் கிடைக்கும்?
இந்த சந்திப்பால் கருப்பையாவுக்கு என்ன லாபம் கிடைக்கும், மற்ற கட்சிகளுக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா, அதிமுகவுக்கு என்ன மாதிரியான எரிச்சல் ஏற்படலாம்.. இந்த சந்திப்பால் ரஜினிக்கு என்னென்ன சிக்கல்கள் வரலாம்.. இப்படி தாறுமாறான எதிர்பார்ப்புகளும் கச்சை கட்டி கிளம்பியுள்ளன.