சரி, மங்கள்யான் அடுத்து என்னப் பண்ணப் போகுதுன்னு தெரியுமா....?
சென்னை: செவ்வாய் கிரகத்தின் மேலே ஜம்மென்று போய் உட்கார்ந்துள்ள இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், அடுத்து கலர் கலராக படங்கள் எடுத்து அனுப்பப் போகிறது. அதை விட முக்கியமாக செவ்வாய் கிரகத்தை மேலெழுந்த வாரியாக அது பல்வேறு ஆய்வுகளையும் செய்யப் போகிறது.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை எட்டிய முதல் ஆசிய விண்கலம் என்ற பெருமிதத்துக்குரிய பெருமையுடன் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள மங்கள்யான் விண்கலம், இன்று காலை செவ்வாயின் சுற்றுப் பாதையில் இணைந்தது.
இதன் மூலம் உலக அளவில் முதல் முயற்சியிலேயே செவ்வாயை எட்டிப் பிடித்த சாதனையை இந்தியா பெற்றது.
மங்கள்யானின் பணிக்காலம்
மங்கள்யான் செவ்வாயை சென்றடைய கிட்டத்தட்ட 10 மாதங்கள் பிடித்த நிலையில் அதன் பணிக்காலம் என்னவோ 6 மாதமும் 10 நாட்களும் மட்டுமே.
60 முறை சுற்றி வரும்
இந்த ஆறுமாதம் 10 நாட்கள் காலகட்டத்தில் அது செவ்வாய் கிரகத்தை மொத்தம் 60 முறை சுற்றி வரவுள்ளது.
என்னென்ன ஆய்வுகள்....!
ரூ. 450 கோடி மதிப்பிலான மங்கள்யான் திட்டத்தின் மூலம் சில முக்கிய ஆய்வுகள் செவ்வாய் கிரகத்தில் நடைபெறவுள்ளன.
செவ்வாயின் இயல்புகள்
செவ்வாய் கிரகத்தின் பிசிக்கல் அம்சங்கள்.. அதாவது அதன் தோற்றம், மேற்பரப்பு உள்ளிட்டவை குறித்து மங்கள்யான் ஆய்வு நடத்தவுள்ளது.
அட்மாஸ்பியர் குறித்தும் ஆய்வு
அதேபோல செவ்வாய் கிரகத்தின் அட்மாஸ்பியர் அதாவது வளி மண்டலம் குறித்தும் சில மேலோட்டமான ஆய்வை மங்கள்யான் நடத்தவுள்ளது. இருப்பினும் விரிவான ஆய்வுகள் இதில் இடம் பெறவில்லை.
தாது வளம் குறித்தும் ஆய்வு
செவ்வாய் கிரகத்தின் மணற்பரப்பு, தாது வளம் உள்ளிட்டவை குறித்தும் சில ஆய்வுகளை மங்கள்யான் மேற்கொள்ளவுள்ளது.
காணாமல் போன ஆறுகளையும் தேடப் போகிறது மங்கள்யான்
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் ஆறுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அந்த ஆறுகள் பின்னர் என்னவாயின, அதில் ஓடிய தண்ணீர் என்ன ஆனது, தரைக்குள் போய்விட்டதா, அப்படிப் போயிருந்தால் ஏன் போனது, அல்லது ஆவியாகிவிட்டதா, ஒரு வேளை ஆவியாகியிருந்தால் ஏன் ஆவியானது?.
ஆறு இருந்தால் ஆக்சிஜனும் இருந்திருக்கனுமே....!
ஆறுகள் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆக்ஸிஜனும் செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இல்லை. ஆக்ஸிஜன் ஏன் அதன் வளி மண்டலத்தை விட்டு முழுமையாக வெளியேறியது... இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தான் மங்கள்யான் தேடப் போகிறது.
சுற்றுச்சூழல் மாறுபாடுகளை கணிக்க முடியும்
இப்படி விஞ்ஞானிகளிடையே உலவும் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்கான விடைகளை அறியும் முயற்சியில்தான் மங்கள்யான் ஈடுபடப் போகிறது. இதன் மூலம் நமது பூமியின் சுற்றுச்சூழல் மாறுபாடுகள் பூமியை எதிர்காலத்தில் எப்படி பாதிக்கும் என்பதை நாம் அறிய முடியும்...!
மீத்தேன் ஆய்வு.. இது முக்கியானது
மங்கள்யானின் ஆய்வுகளில் முக்கியமானது மீத்தேன் ஆய்வு. அதாவது பூமியின் வளிமண்டலத்தில் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மூலம் உற்பத்தியாகும் 90 சதவீதத்திற்கும் மேலான மீத்தேன் வாயு நிரம்பியுள்ளது. ஆனால் செவ்வாயின் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயுக்கள் நிலை கொண்டிருப்பதில்லை. சமீபத்தில் செவ்வாயில் மீத்தேன் வாயு உற்பத்தியானதா என்பதை இந்த ஆய்வின்போது மங்கள்யான் கண்டுபிடிக்க முயற்சிக்கும்.
வண்ணப் படங்கள்
செவ்வாய் கிரகம் குறித்து மங்கள்யான் கலர் கலரான புகைப்படங்களை எடுத்து அனுப்பும். இன்று பிற்பகலில் முதல் படம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன கருவிகளைக் கொண்டு போயுள்ளது....
மொத்தம் 5 பே லோடுகளுடன் மங்கள்யான் செவ்வாய்க்குப் போயுள்ளது. வளிமண்டலத்தை ஆராய உதவும் லைமன் ஆல்பா போட்டோமீட்டர் Lyman-Alpha Photometer (LAP) இதில் ஒன்று. செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் மேற்பரப்பை ஆராய்ந்து அதை படம் பிடிக்க இந்த எல்.ஏ.பி உதவும்.
மீத்தேன் சென்சார்
இன்னொரு உபகரணத்தின் பெயர் மீத்தேன் சென்சார் பார் மார்ஸ் அதாவது Methane Sensor For Mars (MSM) - இது செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் இருக்கிறதா அப்படி இருந்தால் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வரைபடமாக வெளிக்கொண்டு வரும்.
பார்ட்டிக்கிள் என்விரான்மென்ட் ஆய்வு
அதாவது செவ்வாய் கிரகத்தின் வெளிப்புறத்தில் உள்ள பல்வேறு துகள்கள் குறித்த ஆய்வுக்கான கருவி இது. இதன் பெயர் Mars Exospheric Neutral Composition Analyser (MENCA) - சுருக்கமாக மென்கா.
மேற்பரப்பை படம் பிடிக்கும் கருவி
இன்னொரு முக்கிய உபகரணம், டிஐஎஸ் எனப்படும் தெர்மல் இன்பிராரெட்இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர்.. அதாவது Thermal Infrared Imaging Spectrometer (TIS) - இது செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் உள்ள வெப்ப நிலை, உமிழ்திறன் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கான கருவியாகும். இதன் மூலம் செவ்வாயின் மணற்பரப்பில் உள்ள தாது வளத்தையும் அறிய முடியும்.
கலர் கேமரா
அடுத்து கேமரா. அதாவது எம்சிசி எனப்படும் மார்ஸ் கலர் கேமரா. இது வெளிப்புறத் தோற்றம் உள்ளிட்டவற்றை படம் எடுக்க உதவும் கேமராவாகும்.
அரிய கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்புள்ளதா...
நிச்சயமாக எதையும் இப்போது கூற முடியாது. ஆனால் எப்படி நிலாவில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக சந்திரயான் கண்டுபிடித்துக் கூறி அதிசயிக்க வைத்ததோ, அதேபோல செவ்வாய் குறித்தும் ஏதாவது அரிய கண்டுபிடிப்பை மங்கள்யான் தரலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டும் ஏகமாகவே உள்ளது.